திங்கள், 26 டிசம்பர், 2022

திருமாவளவன் : பாஜக சமத்துவத்தை பேசினால் கூட்டணி வைக்கத் தயார்!

 tamil.samayam.com :  பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் ஆனால்.? திருமாவளவன் கண்டிஷன்.!
விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பேசிவரும் சனாதன தர்மம் குறித்து, அதன் உண்மையான அர்தத்தை மிக விளக்கமாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்.
மனு தர்மத்தை தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களிடம் வழங்கிவருகிறார்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தவுடனே,
அதேநாளில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என அறிவித்தார். திருமாவளவனின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சமூக நல்லிணக்க பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்தனர்.


தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்ததை கண்டு ஆர்எஸ்எஸ் பேரதிர்ச்சிக்குள்ளானது.

இப்படியாக தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பவர்களில் முதன்மையானவராக திகழும் திருமாவளவன் பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் என கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விசிக மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. அதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறும்போது, “மதம் சார்ந்த இயக்கங்களான ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமூக நல்லிணக்கணத்தை சீர்குலைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்டவை, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, தாங்கள் விரும்பும் சமூகத்தை கட்டமைப்பதிற்காக, ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையிலான வெறுப்பை வளர்க்கிறார்கள். மக்களின் உணர்வை பயன்படுத்தி, மதங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கிறார்கள். அதை தான் விசிக விமர்சிக்கிறது.

மதத்தின் மீது நம்பிக்கை உள்ள சாதாரண மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சி தொடர்பு இருக்காது. அதுபோல் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் மீதும் பகை வைத்துக்கொள்ள மாட்டார்கள்

ஆனால் மத வெறுப்பை பேசி வரும் பாஜகவை விமர்சித்தால், இந்து மதத்தை விமர்சிப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். விசிகவில் இருப்பவர்களில் 80% பேர் இந்துக்கள்தான். சமூகத்தில் இந்துக்கள்தான் பெரும்பான்மை மக்கள். பாஜகவினர் பேசும் வெறுப்பு அரசியலை தான் எதிர்க்கிகிறோம்.

மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரின் அரசியலைதான் விசிக பேசுகிறது. ஹிந்து மதத்தில் இருக்கும் ஏற்றதாழ்வால் தான் யாரும் ஹிந்து மதத்தில் இணையவில்லை. பாஜகவினர் சமத்துவத்தை பேசினால், விசிக அவர்களோடு கைகோர்க்க தயங்காது. எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியலும், கொள்கைகளிலும்தான் முரண்பாடு” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: