வியாழன், 29 டிசம்பர், 2022

ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த ஐ.எஸ் உறுப்பினர் உட்பட இருவர் தமிழகத்தில் கைது!

hirunews.lk இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவர் உட்பட இருவரை இந்திய புலனாய்வு பிரிவு நேற்று கைது செய்துள்ளது.
அக்டோபர் 23 ஆம் திகதி, தமிழகம்- கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் 250 க்கும் மேற்பட்ட உயிர்களைக் பலிகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மூளையாக செயற்பட்டிருந்த ஸஹ்ரான் ஹாஷிமுடன், ஐஎஸ் அமைப்பில் உறுப்பினரான ஷேக் ஹிதாயத்துல்லா தொடர்பை பேணியதாக இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரும் தமிழகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அங்கு அவர்கள் பயங்கரவாதச் செயல்களுக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டதாகவும் விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

கடந்த 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தொடர்புகள் குறித்து, இந்திய தேசிய புலனாய்வு பிரிவால், விசாரிக்கப்பட்ட ஜமீஷா முபீன் என்பவர், கோயம்புத்தூர் உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23 ஆம் திகதி காலை, தாம் ஓட்டிச் சென்ற மகிழுந்தின் இருந்த எரிவாயு கொள்கலன் வெடித்துச் சிதறியதால் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இந்த வெடிப்பு வழக்கில் முதன்மை சந்தேகநபராக பதிவு செய்யப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: