வெள்ளி, 30 டிசம்பர், 2022

கம்போடியாவில் நட்சத்திர ஓட்டல் தீவிபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு

மாலை மலர் :  பெனாம் பென்.  கம்போடியா நாட்டில் தாய்லாந்து எல்லையில் கிராண்ட் டயமண்ட் சிட்டி கேசினோ என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.
நேற்றிரவு 11.30 மணி அளவில் ஓட்டலின் ஒரு அறையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டல் அறைக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதில் 10 பேர் பலியானதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ஓட்டலில் பரவிய தீ முற்றிலும் அணைக்கப்பட்டது என்றும், மீட்பு பணிகளும் முடிந்தன என்றும் அதிகாரிகள் கூறினர்.
தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 57 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர்கள் தெரிவித்தனர்.
ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: