புதன், 16 நவம்பர், 2022

“ஒருநாள் இது நடக்கும்” : இறப்பதற்கு முன் ஷ்ரத்தா

மின்னம்பலம் -christopher :  டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஷ்ரத்தா, தான் கொல்லப்படுவதற்கு முன் தன்னை காப்பாற்றும்படி தகவல் கொடுத்ததாக அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் அப்தாப் பூனாவாலா என்பவரால் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
இதனையடுத்து போலீசார் இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 26 வயதான ஷ்ரத்தாவுக்கும், கொலையாளி அப்தாப் அமீன்(28) என்ற நபருக்கும் டேட்டிங் செயலியான பம்பிள் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
சீக்கிரமே இது காதலாக மாறிய நிலையில், இருவரும் முதலில் மகாராஷ்டிராவில் லிவ்-இன் உறவில் வாழ்ந்தனர். பின்னர் டெல்லிக்கு சென்ற நிலையில் தான் இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
கடந்த மே மாதம் திருமணத்திற்கு வற்புறுத்திய ஷ்ரத்தாவை கொலை செய்த அப்தாப், பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். நாற்றம் வராமல் இருக்க அதை பிரிட்ஜில் வைத்திருந்த அமீன், கொஞ்சம் கொஞ்சமாக அதை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று போன்றுள்ளார்.

இந்நிலையில் 6 மாதத்திற்கு பிறகு தனது மகள் மாயமாகிவிட்டதாகச் ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் கொடுத்துவரும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஷ்ரத்தாவின் நண்பர் ரஜத் சுக்லா

ஷ்ரத்தாவின் நண்பரான ரஜத் சுக்லா என்பவர், கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக ஷரத்தா என்ன மனநிலையில் இருந்தார் என்பது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஷரத்தா உடல்ரீதியாக கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். இதை அவர் தனது கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக நண்பர் ஒருவரிடம் கூறினார்.

நானும் அவரது நட்பு வட்டத்தில் இருந்ததால், அது என்னிடமும் கூறப்பட்டது. ஷ்ரத்தா, அப்தாப்பின் காதலை முறித்து கிளம்புவதாக கூறியிருக்கிறாள். ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை.

மேலும் ஷ்ரத்தா, தனது சிறுவயது தோழியிடம் தன்னை மீட்கும்படி கூறியிருக்கிறார். இல்லையெனில் தான் ஒருநாள் இறந்து கிடப்பேன் என்று கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.

ஷ்ரத்தா மிகவும் சுறுசுறுப்பான பெண். அவளிடம் எப்போதும் ஒரு தீப்பொறி போல் இருப்பார். ஆனால் அப்தாப் அவரை கொன்றுவிட்டார்.” என்று ரஜத் சுக்லா கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: