செவ்வாய், 12 ஜூலை, 2022

பஸில் ராஜபக்‌ஷேவை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய ஊழியர்கள் + பயணிகள்!

மின்னம்பலம் : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவின் சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பஷில் ராஜபக்‌ஷே கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சியில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தற்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினர்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்து பதவி விலகும் ராஜபக்‌சே குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரான பஷில் ராஜபக்‌சே கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இலங்கையின் நிதி அமைச்சராக இருந்தவர் பஷில் ராஜபக்‌சே. மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் மக்கள் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த மாதம் 9ஆம் தேதி தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இன்று காலை துபாய்க்கு தப்பி செல்ல முயற்சித்துள்ளார் பஷில் ராஜபக்சே. நள்ளிரவு 12.15 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் விஐபி வாசலை வந்தடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் அடையாளம் கண்டுகொண்டதுடன், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளும் மறுத்துவிட்டனர்.

அதனை தொடர்ந்து அதிகாலை 3.15 மணி வரை அங்கு இருந்த பஷில் ராஜபக்‌ஷே, தனது முயற்சி தோல்வி அடைந்த நிலையில் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து இலங்கை குடிவரவு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.எஸ்.கனுகல செய்தியாளர்களிடம் கூறுகையில், "இலங்கையில் நிலவும் அமைதியின்மை காரணமாக, அரசியல் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என குடிவரவு அதிகாரிகள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். எனவே இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை விஐபிக்கள் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை. கொழும்பு விமான நிலையத்தின் விஐபி ஓய்வறையில் பசில் ராஜபக்சவுக்கு சேவை செய்ய பணியாளர்கள் மறுத்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

- கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: