திங்கள், 30 மே, 2022

நக்மா அதிருப்தி.. மாநிலங்கள் அவை தேர்தல் .. எனக்கு தகுதி இல்லையா? மகிளா காங்கிரஸ்...

மின்னம்பலம் : மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் நடிகையும் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 57 எம்பிக்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இதற்காக வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைகிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் உட்பட நாடு முழுவதும் 16 வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.
கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியலைக் காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்திலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மகாராஷ்டிராவிலிருந்து இம்ரான் பிரதாப் ஹரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஜி 23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் விவேக் தங்கா ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நடிகையும் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2003-04ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் நான் சேர்ந்தபோது, நாங்கள் ஆட்சியில் இல்லை. அந்த சமயத்தில் சோனியா ஜி என்னை ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுப்பதாகத் தனிப்பட்ட முறையில் உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து 18 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் கூட இன்னும் ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. ஆனால் மகாராஷ்டிராவிலிருந்து இம்ரானுக்கு இடம் அளிக்கப்படுகிறது. அப்படி என்றால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நான் என்ன தகுதி குறைந்தவளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: