திங்கள், 30 மே, 2022

இந்தியா திராவிடர்கள், ஆதிவாசிகளுக்கு சொந்தமானது'ஓவைசி பேச்சு

 தினத்தந்தி : தானே, 'இந்தியா திராவிடர்கள், ஆதிவாசிகளுக்கு சொந்தமானது' என பிவண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓவைசி பேசினார்.
தானே மாவட்டம் பிவண்டி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம்.(மஜ்லிஸ்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை, தங்கள் வாக்கு வங்கியைக் காக்க விரும்புவதால்,
சிறுபான்மையினர் குறிவைக்கப்படும்போது வாய் திறப்பதில்லை.
நாட்டில் 8 ஆண்டுகால ஆட்சியை பா.ஜ.க.வும், மோடியும் கொண்டாடும் வேளையில்,


பணவீக்கம், இன்னபிற பிரச்சினைகளால் நாட்டில் நிலவும் வேதனையை அவர்கள் உணரவில்லை. இந்த நாட்டு வரலாறு தொடர்பாக மற்ற கட்சிகள் 600 ஆண்டுகால உதாரணத்தைச் சொல்கின்றன.
நான் 65 ஆயிரம் ஆண்டுகால உதாரணத்தைச் சொல்கிறேன்.
இந்த நாடு, மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ, உத்தவ் தாக்கரேக்கோ, சரத் பவாருக்கோ அல்லது எனக்கோ சொந்தமானது அல்ல.
மாறாக, திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் சொந்தமானது. மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்பவை தங்களைக் காப்பாற்ற முன்வராது என்பதை முஸ்லிம்களும், தலித்துகளும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் உணர வேண்டும்.' இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: