செவ்வாய், 8 மார்ச், 2022

PTR நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம்.! TN நிதி அமைச்சர் பி.டி.ஆர்

 tamil.samayam.com : "நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம். அது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும்" என, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் திமுகவைச் சேர்ந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.


கருத்தரங்கில் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசு கொண்டு வரும் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால் தான் நாடு வளர்ச்சி காணும். அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
பின்னர், கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சி அதாவது தனி நபர் வருவாய் இறங்கு முகத்தில் இருப்பது ஏன்? தமிழகத்தின் ஜிடிபி ரேங்க்கிங் குறைந்து கொண்டே வர என்ன காரணம்? என, அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனிடம், நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வளர்ச்சிக்கான வரையறையா எதை சொல்லுவிங்க?

தமிழகத்தின் தனிநபர் வருவாய் குஜராத்தை விட 10ல் இருந்து 15 ஆயிரம் குறைவு தான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழகத்தில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 100 சதவீதம் பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்கு உட்பட்ட பெண்களே தமிழகத்தில் இல்லை. அதேவேளையில், குஜராத்தில் 15 முதல் 20 சதவீதம் பெண்கள் பள்ளிக்கூடம் போவதில்லை. இது எந்த மாதிரி வளர்ச்சி ?
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதே குஜராத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். இதில் எந்த சமூக நிலையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? ஜிடிபி மட்டுமே வளர்ச்சியை நிர்ணயிக்காது. நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம். அது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும். அதற்கு பெயர் திராவிட மாடல் எனத் தெரிவித்திருந்தார். அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகரானின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் பேச்சு தமிழகம் மட்டுமல்லாமல் வட மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: