வெள்ளி, 1 அக்டோபர், 2021

"கவலைப்படாதீங்க".. தைரியம் தந்த முதல்வர்.. பிடிஆர் எடுத்த திடீர் முடிவு.. புது கொள்கை என்ன?

 நிதித்துறை

Hemavandhana -  Oneindia Tamil:  சென்னை: "நான் யாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு பதில் தருவேன்" என்று நிலவி வரும் தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிடிஆர் ஒரு அதிரடி முடிவை அறித்துள்ளார்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பங்கேற்காதது குறித்த விவாதங்கள் சமீபகாலமாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன..
இதற்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டார்..
ஆனால் அதற்கும் சலசலப்பு கிளம்பியது..
ஒருபக்கம் பாஜகவின் அண்ணாமலையும் அதிமுகவில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆரை விமர்சித்து மாறி மாறி பேட்டிகளை தந்து வந்தனர்.
'அவர் அமைச்சர் மட்டுமல்ல..அதுக்கும் மேல.

அதேசமயம், பிடிஆர் அளித்து வரும் பேட்டிகளும் பரபரப்பை கிளப்பி விடுவதால் திமுகவில் ஒருவித தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன. டிகேஎஸ் இளங்கோவன் குறித்து பிடிஆர் சொன்ன கருத்தை வைத்தே அவருக்கு செக் வைக்கவும் திமுகவுக்குள் சில முயற்சிகள் நடந்தது. ஆனால் திமுக மேலிடம் எதையுமே பொருட்படுத்தவில்லை என்றே தெரிகிறது..

நிதித்துறையை பிடிஆரை போல ஒருவர் இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று மேலிடம் கருதுகிறது. உங்கள் வேலையை சரியாக பாருங்கள். யாரை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் பிடிஆருக்கு தைரியம் சொன்னதாக செய்திகளும் கசிந்தன... இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தந்த பேட்டியில் அதிரடி முடிவை பிடிஆர் அறிவித்துள்ளார்.

அதில், "முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதில் தர போவதில்லை.. அவர்கள் இருவரையும் முழுவதுமாக புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளேன்... இப்போதில் இருந்து, எனது நேரத்திற்கு மதிப்பில்லாதோருக்குப் பதில் அளிப்பதைத் தவிர்ப்பது எனது கொள்கையாக மாறியிருக்கிறது. ஒரு நிதியமைச்சராக நான் செய்வதற்கு அவ்வளவு இருக்கிறது...

அதனால் நான் யாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு பதில் தருவேன்.. ஒரு அரசியல்வாதியின் மிகப்பெரிய கடமை என்பது அரசுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கடினமானவற்றையும் எளிய வாக்காளர்களுக்குப் புரிய வைப்பதுதான்" என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்...
இதையடுத்து சமீப காலமாக நிலவி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை நிதியமைச்சர் பிடிஆர் எடுத்துள்ளார்.. இந்த முடிவு அதிமுக, பாஜகவுக்கு மட்டுமல்லாமல், திமுகவில் உள்ள சில சீனியர்களுக்கும் மறைமுக பதிலடியாக அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை: