திங்கள், 27 செப்டம்பர், 2021

தலித்தா ? அப்போ பிளேட் நீயே கழுவு… உ.பி பள்ளியில் மாணவர்களுக்கு Separate Plates for Dalit Muslim Students in UP’s Primary Schoo

 tamil.indianexpress.com  : உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் உள்ள தவுதபூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களில் 60 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், இந்தப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் சாப்பிடும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாத்திரங்கள் தனியாக வைக்கப்படுவதாகவும், அவற்றை அக்குழந்தைகளே கழுவுவதாகப் புகார் வந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், புகார் உண்மைதான் என உறுதியானதால், பள்ளியின் தலைமை ஆசிரியர் கரீம் ராஜ்புத் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், எஸ்.சி சமூகத்தினர் உபயோகித்த பாத்திரங்களைத் தொட மாட்டோம் எனக் கூறிய இரண்டு சமையல்காரர்களும் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


இவ்விவகாரம் குறித்து புதிதாகப் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஞ்சு தேவியின் கணவர் தான், பிஎஸ்ஏ அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
பாத்திரங்களை தொட மாட்டோம்
இதுகுறித்து பேசிய பிஎஸ்ஏ அதிகாரி கமல் சிங், ” பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, பட்டியலின மாணவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் தனியாகவும், மற்ற மாணவர்களின் பாத்திரங்கள் தனியாகவும் வைக்கப்பட்டிருந்தது.

மேலும், அங்கிருந்த சமையல்காரர்கள் சோம்வதி, லக்ஷிமி தேவி இந்தச் சமூகத்தினர் பயன்படுத்திய பாத்திரங்களைத் தொட மாட்டோம். எங்களை வற்புறுத்தினால், வேலையை விட்டுவிடுகிறோம் எனக் கூறியுள்ளனர். சாதியை கொண்டு பணியாற்றிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய மஞ்சு தேவி கணவர் சஹாப் சிங், ” சில மாணவர்களின் பெற்றோர்கள் இதுதொடர்பாக என்னிடம் புகார் அளித்தார்கள். நான் செப்.18ஆம் தேதி பள்ளிக்கு ஒரு மீட்டிங்காக சென்றிருந்தேன். அப்போது, சமையலறை மிகவும் மோசமான நிலையிலிருந்தது. வெறும் 10 முதல் 15 பிளேட்கள் மட்டுமே இருப்பதை பார்த்தேன்.

மாணவர்கள் தான் பிளேட்களை கழுவ வேண்டும்

இதுகுறித்து சமையல்காரர்களிடம் கேள்வி எழுப்பினேன்.இந்தப் பிளேட்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொதுப் பிரிவு மாணவர்கள் பயன்படுத்தியது, மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்திய 50 முதல் 60 பிளேட்கள் தனியாக வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை அந்த மாணவர்கள் தான் கழுவ வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டுத் திகைத்துப் போனேன்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், உள்ளூர் பத்திரிக்கையர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். பாஜக தலித் உயர்வுக்கான பெரிய திட்டங்களை முன்வைக்கிறது. அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களுக்கும் பதவிகள் கிடைக்கின்றன. ஆனால் இதுதான் உத்தரப் பிரதேசத்தின் உண்மை நிலை.

அம்பேத்கர் அனுபவித்த அதே சாதி கொடுமை

சில தசாப்தங்களுக்குப் முன்பு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தனது பள்ளி நாட்களில் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டார்.ஆனால், தற்போதும் அதே நிலை தொடர்வது என்பது வேதனைக்குரியது” என்றார்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததிலிருந்து, பள்ளியில் மாணவர்கள் பிளேட் கழுவுவது போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

கருத்துகள் இல்லை: