வெள்ளி, 4 ஜூன், 2021

அனைத்து துறைகளிலும் தமிழ் யூனிகோடு: தலைமை செயலாளர்!

அனைத்து துறைகளிலும் தமிழ் யூனிகோடு: தலைமை செயலாளர்!
minnambalam : அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையைக் கையாள வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஃபாண்ட் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து அரசு துறைகளிலும் ஒரே தமிழ் ஃபாண்ட் பயன்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழக இணைய கல்விக்கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோடு, அனைத்து வகை தமிழ் குறி அமைவு (TACE16) கொண்ட எழுத்துருக்கள் (Fonts), விசைப்பலகை செலுத்துகைகள் (Keyboard Drivers) ஆகியவற்றுக்கு தமிழக தகவல்தொழில் நுட்பத்துறை ஆணை 5இன்படி, அனுமதி அளித்து வெளியிட்டுள்ளது. இவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையின் கடிதம் எண் 3973இன்படி, அனைத்து அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறையின் தலைவர்கள் உள்ளிட்டோர் வானவில், அவ்வையார் எழுத்துருக்களுக்குப் பதிலாக மேற்கண்ட தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தலாம். இதையடுத்து அனைத்து அரசுத்துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இதுவரை வானவில், அவ்வையார் போன்ற எழுத்துருக்களைத்தான் தினசரி பணிகளில் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அந்த எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றி அமைக்கின்ற கருவிகள் இல்லாமையால் மேற்கண்ட எழுத்துருக்களைப் பயன்படுத்தும் நிலை இருந்தது. எனவே, டிவிஏ மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோடு மாற்றி அமைக்கும் கருவி (Tamil Unicode Conversion Tool), தமிழ் யூனிகோடு எழுத்துரு ஆகியவை (http://www.tamilvu.org/)[என்ற] இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதனால், அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையைக் கையாள வேண்டும். இதற்கு முன்பாகப் பயன்படுத்தப்பட்டதைவிட தமிழ் யூனிகோடு மேம்படுத்தப்பட்டதாக இருப்பதால் இதைப் பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: