திங்கள், 17 மே, 2021

அமைச்சர் மா சுப்பிரமணியத்தின் அசுர சாதனை! பல நாடுகளில் மாரத்தான் புகழ் , விபத்தில் பாதிப்பு சர்க்கரை நோய் . வழக்கறிஞர், அதிரடி அரசியல் ....

Sathik Basha  : தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னைவாசிகள் பலருக்கும் பரிட்சயமான நபர் மா.சு. பிறந்தது வாணியம்பாடி பக்கத்துல இருக்குற ஒரு சின்ன கிராமம். ஆனா, சின்ன வயசுலயே சித்தூர் பக்கத்துலயிருக்குற புல்லூர் கிராமத்துல குடியேறிய சூழலில். அங்கேதான் ஆரம்பக்கல்வி படித்தார்.
இதன் பின்னர் சென்னைக்கு குடி பெயர்ந்தனர். மா.சு. அப்பாவுக்கு மீன் பிடிப்பதுதான் தொழில். குடும்பத்துலயே முதல் பட்டதாரி இவர்தான். இவர் குடும்பத்தில் இருந்து தி.மு.க-வின் முதல் உறுப்பினரும் இவர்தான்.
இவர் மனைவி பெயர் காஞ்சனா. ரெண்டு மகன்கள். ஒருத்தர் பேரு இளஞ்செழியன், லண்டன்ல மருத்துவரா இருக்கார்.
மருமகளும் மருத்துவர். ரெண்டு பேரக் குழந்தைங்க, பேரன் பெயர் இன்பன்; பேத்தி மகிழினி.  இன்னொரு மகன் அன்பழகன். மாற்று திறனாளியாக இருந்து அண்மையில் காலமாகி விட்டார்.


இப்போது சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். தி.மு.க-வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும்கூட. `எப்போது தூங்குகிறார் என்பதே தெரியாமல் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் என்று சகல மீடியாக்கள் மத்தியிலும், மற்றவர்களிடமும் பெயரெடுத்தவர்.
இதை எல்லாம் தாண்டி  அறுபது வயதை தாண்டிய நிலையில் 20 வருடங்கள் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்தும், மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பல கிலோமீட்டர்கள் ஓடி சர்வதேச அளவில் சாதனை புரிந்தவர்களில் இவரும் ஒருவர்.
 

சர்க்கரைநோய் பாதிப்பு மட்டுமல்ல... 2004-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில், `இனி இவர் நடப்பதே சிரமம்’ என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்... அதையும் தகர்த்து, எத்தனையோ பதக்கங்களுக்கும் பரிசுகளுக்கும் சொந்தக்காரராக வலம் வருகிறார் சுப்பிரமணியன்... 

அது குறித்து பேச்சு வந்த போது "எனக்கு சர்க்கரைநோய் பாதிப்பு இருக்குறது 1995-ம் ஆண்டுதான் தெரியவந்துச்சு. அதுக்கப்புறம்தான் முறையா நடைப்பயிற்சி போக ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட பத்து வருஷம் நடைப்பயிற்சி மட்டும்தான் . 2004-ம் வருஷம் அக்டோபர் மாசம் ஒரு கட்சி விழாவுக்காக மதுரைக்குப் போயிருந்தோம். எங்க கார் மேல ஒரு கன்டெய்னர் லாரி மோதிடுச்சு. அது மிகப் பெரிய விபத்து. என்கூட வந்த என் நண்பர் ஜம்புலிங்கம் ஸ்பாட்லயே இறந்துட்டார். எனக்கு வலது கால் மூட்டு உடைஞ்சு ஆறு துண்டாகிடுச்சு. மருத்துவர்கள், கம்பி போட்டு, காலை ஒட்டவெச்சாங்க. `இனிமே வாழ்நாள் முழுக்க உங்களால சம்மணம் போட்டு உட்கார முடியாது, ஓட முடியாது’னு சொல்லிபுட்டாங்க.
 

அதே சமயம் என்னோட காலைச் சரிபண்றதுக்காக பிசியோதெரபி ட்ரீட்மென்ட் ஆறு மாசம் எடுத்துக்கிட்டேன். ஆனா, அதனால பெரிய மாற்றம் ஏதுவும் ஏற்படலை. அடுத்ததா, யோகா கத்துக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்லயே எல்லா வகை ஆசனங்களையும் செய்ய ஆரம்பிச்சுட்டேன். நான் பத்மாசனம் செய்யிறதைப் பார்த்த என் டாக்டர் ஷாக்காயிட்டார்.
அதுனாலே கால் நிலைமை ஓரளவுக்குச் சரியாகிடுச்சு. அடுத்த ஏழெட்டு வருஷங்களுக்கு வாக்கிங், ஜாக்கிங் மட்டும்தான் போயிட்டிருந்தேன். 2013 -ம் வருஷத்துலதான் `சரி ஓடிப் பார்க்கலாம்’னு முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல கொஞ்ச தூரம் ஓடினேன். நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமா ஓடுற தூரத்தை அதிகப்படுத்திக்கிட்டேன். 

முதன்முறையா, 2014-ம் வருஷம் பிப்ரவரியில பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்த மாரத்தான் போட்டியில நண்பர்களோட சேர்ந்து கலந்துக்கிட்டேன். மொத்த தூரம் 21 கி.மீட்டர். என்கூட வந்த நண்பர்கள் எல்லாரும் மூணு மணிநேரத்தைத் தாண்டியும் ஓடிட்டு இருந்தாங்க. நான் வெறும் 2:30 மணி நேரத்துல 21 கி.மீட்டர் தூரத்தை ஓடி முடிச்சுட்டேன்.
இத்தனைக்கும் என்கூட வந்த நண்பர்கள் என்னைவிட 20 வயசு குறைஞ்சவங்க. அப்பத்தான், என்னால முடியும்னு எனக்குள்ளயே ஒரு நம்பிக்கை வர ஆரம்பிச்சது. `இனி எந்த மாரத்தான் போட்டியையும்விடக் கூடாது’னு முடிவு பண்ணி, எங்க போட்டி நடந்தாலும் தேடித்தேடிப் போய் ஓட ஆரம்பிச்சேன். இந்திய அளவுல டெல்லி, மும்பை, புனே, சிம்லா, ஹைதராபாத், சென்னை, நெல்லை, கோவை போன்ற மாநகரங்கள்லயும், உலகளவுல லண்டன், கத்தார், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, நார்வே போன்ற நாடுகள்லயும் மாரத்தான்ல ஓடியிருக்கேன். 

ஓட ஆரம்பிச்ச ரெண்டு வருஷத்துல (Feb-2016) 25 போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஓடி முடிச்சேன். இதனால, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல தேசிய அளவிலான சாதனையாளரா என் பேர் வந்துச்சு.
29 போட்டிகள்ல ஓடி முடிச்சதும், `ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல என் பேர் வந்தது. 2017-ம் வருஷம் பிப்ரவரியில 50 மாரத்தான் போட்டிகள்ல ஓடி முடிச்சேன். `வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டி’ (World records university) எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்துச்சு. . அப்பவே, 2019-ம் வருஷம் பிப்ரவரிக்குள்ள அதாவது, என் அறுபது வயசுக்குள்ள 100 போட்டிகள்ல ஓடி முடிக்கணும்னு இலக்குவெச்சுக்கிட்டேன். இதுவரை, 75 மாரத்தான் போட்டிகள்ல ஓடிப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். 50 வயசுக்கு மேல இருக்குற ஒருத்தர், சர்க்கரைநோய் இருந்தும், இத்தனை மாரத்தான் போட்டிகள்ல கலந்துகிட்டு ஓடுறதை கௌரவிக்கத்தான் இந்த விருதுகள் எல்லாம்.
 

கூடவே “நான் காலைல 5 மணிக்கு மேல தூங்கி ஒரு 28 வருஷம் இருக்கும். எந்த வெளிநாட்டுல, வெளி மாநிலத்துல, வெளியூர்ல இருந்தாலும் 5 மணிக்கு எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவேன். ஒருவேளை அதிகாலைல வெளியூர்களுக்கு போறதா இருந்தா செங்கல்பட்டு / பூந்தமல்லி தாண்டினதும் வண்டிய விட்டு இறங்கி 10 கி.மீ ஓடிடுவேன், வண்டி பின்னாடியே வரும். அப்புறம் ரோடு ஓரத்துல கிணறு, பம்புசெட் இருந்தா அங்கேயே குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்குவேன். அப்படி எதும் இல்லன்னா, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல போய் ஃப்ரெஷ் ஆகிடுவேன். அதுனாலே நான் எந்தச் சிறப்புப் பயிற்சியும் எடுத்துக்கிறது இல்லை. 

ஏதாச்சும் போட்டிக்குப் போறதுக்கு முன்னாடி சாதாரண செக் -அப்கூட செஞ்சுக்க மாட்டேன். வழக்கமா தினமும் செய்யும் உடற்பயிற்சிகளை மட்டும்தான் செஞ்சிட்டுப் போவேன்.
சாப்பாட்டு விஷயத்துல எந்தக் கட்டுப்பாடும்வெச்சுக்கறதில்லை. மீனையும் சிக்கனையும்தான் அதிகமா விரும்பிச் சாப்பிடுவேன். வாரத்துல ரெண்டு, மூணு நாள் பழையசோறுகூட சாப்பிடுவேன். 

பொதுவா சர்க்கரைநோயாளிகள் பழையசோறு சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நான் அதைப் பத்திக் கவலைப்படுறது இல்லை. எல்லா வகை ஜூஸும் குடிப்பேன். ஸ்வீட் சாப்பிடுவேன். விருப்பப்படுறதையெல்லாம் சாப்பிடுறேன். ஆனாலும், என்னோட சர்க்கரை அளவு கன்ட்ரோல்லதான் இருக்கு."
"இதுக்கிடையிலே மாசத்துல குறைஞ்சது ரெண்டு படமாவது தியேட்டர்ல போய் பார்த்துடுவேன். நான் சிவாஜி ரசிகன். சமூகக் கண்ணோட்டத்தோட வர்ற படங்களை யார் நடிச்சிருந்தாலும் பார்ப்பேன். நெறய புத்தகங்களும் படிப்பேன்.” என்றவரிடம் மறக்க முடியாத சம்பவம் இப்ப ஒன்னு சொல்லுங்க? -ன்னு கேட்ட போது ஒவ்வொரு ஊர்ல ஓடும் போதும், நீங்க தான் இன்ஸ்பிரேஷன்னு ஒரு 10 பேராச்சும் சொல்லுவாங்க. 

ஒருமுறை புனேவில் பவ்தான் மலையில் கிறிஸ்துமஸ் மாரத்தானில் கலந்துக் கொண்டிருந்தேன். அப்போ என்ன மாதிரியே ஒரு பெரியவரும் ஓடிட்டு இருந்தாரு. அவருக்கிட்ட பேச்சுக் கொடுத்தப்போ, மும்பைல இருந்து வந்துருக்கறதாகவும், ஒன்றரை வருஷத்துல 60 வயசாகப் போகுதுன்னு சொன்னாரு. உங்களுக்கு என்ன லட்சியம்ன்னு அவர் கிட்ட கேட்டேன். இதுவரைக்கும் 48 மாரத்தான் ஓடியிருக்கேன். 10 வருஷமா ஓடிட்டு இருக்கேன். 60 வயசுல 60 மாரத்தான் முடிக்கணுன்னு சொன்னாரு. 

ஏன் இந்த இலக்குன்னு கேட்டேன், சென்னைல சுப்பிரமணியன்னு ஒருத்தர் 5 வருஷத்துல 100 மாரத்தான் ஓடியிருக்காரு. அவர் தான் இன்ஸிபிரேஷன்னு சொன்னாரு. அப்புறம் நான் தான் அந்த சுப்பிரமணின்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். பிறகு 2,3 மாரத்தான்ல அவர பாத்தேன். மொழி கடந்து மானசீகமா அவர் என்ன நினைச்சிருந்தது, எனக்கு ஊக்கமா இருந்துச்சு.” அப்படீன்னார்
 

அடிக்கடி மா.சு. சொல்லும் சேதி :
"பெரும்பாலானவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணம், மன அழுத்தம்தான். அதுனாலே இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும், எல்லா தரப்பினருக்கும் அவசியமானது உடற்பயிற்சி. வெகுவாக மாறிய வாழ்க்கை முறைகளால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுனாலே குறைந்த பட்சம் மூச்சுப் பயிற்சியை-வாவது விடாம செய்யுங்க. ஏன்னா இதுக்கு தனியா எந்த இடமும் தேவைப்படாது. கார்ல போகும் போதும், சும்மா உக்காந்துருக்கும் போதும், காலை மாலை இரு வேளையும் தொடர்ந்து செய்யுங்க"
என்று உடல் நலம் சார்ந்தே வழிகாட்டிய மா.சு-விற்கு பொருத்தமாக சுகாதார துறைதான் கொடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: