புதன், 19 மே, 2021

கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில் வருகிறது ! தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிரடி!

 Velmurugan P  - tamil.oneindia.com  :  சென்னை: அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில்,
கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வர ஐந்து அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் ராஜாமணி அப்பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட குமரகுருபரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பதவி ஏற்ற அன்றே அதிரடியாக செயல்பட தொடங்கி உள்ளது.


கடிதம் எழுதி உள்ளார் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்ற உடனேயே குமரகுருபரன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 அம்ச செயல் திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகிறது.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோல்களில் ஆன்லைன் மூலம் நிர்வாகம், சட்டப்பூர்வமான ஆவணங்களை மின்னணுவில் மாற்றம், கோயில் சொத்துக்களில் வருமானங்களை அதிகரித்தல் உள்ளிட்ட 5 அம்ச செயல் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை. விரைவில் இத்துறையின் ஆன்லைன் மென்பொருள் அமல்படுத்தப்படும்

தொழில் நுட்பம் மேம்பாடு எனவே, அனைத்து அதிகாரிகளும் தங்களது அலுவலகங்களில் தொழில்நுட்ப வசதிகளில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அப்போது தான் இமாலய சாதனைகளை பெற முடியும். கள ஆய்வு செய்யும் அதிகாரிகள் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்தல் வேண்டும். மேலும், அனைத்து அதிகாரிகளுக்கும் தேசிய தகவல் மையம் மூலம் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இவ்வாறு அந்த கடிதத்தில் குமரகுருபரன் கூறியுள்ளார்.

காலி பணியிடங்கள் இதனிடையே அறநிலையத்துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 14 துணை ஆணையர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதே போன்று கடந்த அரசால் அறிவிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 2 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளார்கள் 103 காலி செயல் அலுவலர் பணியிடங்களும் அறிவிப்போடு நிற்கிறது. ஏற்கனவே, உள்ள காலி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் குமரகுருபரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை: