சனி, 22 மே, 2021

PTR : குஜராத்திற்கு நிறைய கொடுக்கறாங்க.. ஆனால் தமிழகத்திற்கு குறைவுதான்.. தடுப்பூசி குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 Vishnupriya R - tamil.oneindia.com :  மதுரை: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை; வந்த பின்னரே பணிகள் துவங்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மக்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று காய்கறி, பழம், மளிகை பொருட்கள் விநியோகம் செய்வது குறித்தும், கொரோனா தடுப்பிற்கு மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு பணிக்குழு (Task Force) செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி : மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொடுத்ததை போல விலையில் மாறுபாடு இல்லாமல் கொடுப்பது குறித்து ஆலோசித்து உள்ளோம்.



மாநிலங்கள் குஜராத்தில் அதிகமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வழங்குகின்றன. தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்கள் செயல்முறை குறித்து மத்திய அரசு முரண்பட்டு செயல்படுகிறது. முதலில் மாநிலங்கள் வாங்க கூடாது என்று. இப்போது, மாநிலங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறது.

எனவே, 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. அது வந்த பின்னரே பணிகள் துவங்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டி: மதுரையில் உள்ள எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணிக்கிறார்கள். வெளிப்படை தன்மைக்காக, கூட்டு உழைப்பிற்காக நாங்கள் அழைப்பு விடுத்தும் அவர்கள் தவிர்க்கிறார்கள். இனி அவர்களும் பங்கேற்று, தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே கிடையாது என்றார்.

கருத்துகள் இல்லை: