ஞாயிறு, 3 ஜனவரி, 2021

திமுக ஆட்சியில் கல்விக் கடன் ரத்து: ஸ்டாலின் வாக்குறுதி!

minnambalam : திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன் ரத்துசெய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.   சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதோடு, கையெழுத்தும் பெறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிவருகிறார்.
திமுக ஆட்சியில் கல்விக் கடன் ரத்து: ஸ்டாலின் வாக்குறுதி!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கிராமத்தில் இன்று (ஜனவரி 3) மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஸ்டாலின், அங்கு அமர்ந்திருந்த பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இறுதியாக உரையாற்றியவர், அதிமுக ஆட்சியின் போது கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. அதனால்தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றார்.

100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக ஊதியம் கொடுப்பதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் திட்டத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கையை உயர்த்தலாமா என்பது குறித்து யோசனை செய்து கொண்டுள்ளோம். மேலும் கூலியை அன்றைக்கே, அதே இடத்தில் வழங்கும் சூழல் நிச்சயம் உருவாக்கித் தருவோம் என்று உறுதியளித்த ஸ்டாலின், மாணவர்களின் கல்விக்கடன் திமுக ஆட்சியில் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றதோடு, தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலனுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் பஞ்சு பதுக்கல் தடுக்கப்படும் எனவும், நெசவாளர் நலனை கருத்தில் கொண்டு ஜவுளித்துறை மேம்படுத்தப்படும் என்று உரையாற்றினார்.

எழில்

கருத்துகள் இல்லை: