சனி, 9 ஜனவரி, 2021

தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னட செம்மொழி அந்தஸ்து ஆதார ஆவணங்களை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது

சொந்தமா எழுத்துருவே (Alphabet) இல்லாத சமஸ்கிருதத்திற்கு எப்படி செம்மொழி அந்தஸ்து கொடுக்க முடியும் என்று அடுத்து ஒரு வழக்கு போட்டு கேட்கணும்! 

Sivakumar Shivas : தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான ஆதார ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.                         சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் காந்தி, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.                         இதில், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த தகுதிகள் இல்லாத காரணத்தால், உலகில் பழமையான மொழிகள் என்று கூறப்படும் அரபிக், பெர்சியன் ஆகிய மொழிகளுக்குக்கூட செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்நிலையில், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005ஆம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013ஆம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014ஆம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கி இருக்கிறது.                    மொழி வளமை, இலக்கண, இலக்கிய பாரம்பரியம் உள்ளிட்ட எந்த ஒரு தகுதியும் இல்லாத மொழிகளுக்கு எல்லாம் தன் விருப்பப்படி மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி வருகிறது. அதனால் இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் காந்தி ஆஜராகி, “தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானவை. அதேபோன்ற பழமையான இலக்கண, இலக்கியங்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா போன்ற மொழிகளில் இல்லை. அவை இருந்தால், இந்த கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம். நானும், உடனே திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நான் பிற மொழிகளுக்கு எதிரானவன் கிடையாது. அதே நேரம், தமிழில் அனைத்து சொற்களும் உள்ளன. பிறமொழி சொல் இல்லாமல் தமிழை சிறப்பாகப் பயன்படுத்தலாம். ஆனால், சமஸ்கிருத வார்த்தைகள் இல்லை என்றால், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளே இல்லை. எனவே, இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது தவறு. அதனால் அதை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், “பிறமொழி கலந்துவிட்டதால், அதற்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்க முடியாது என்று மனுதாரர் கூறுகிறார். ஆனால், ‘விவசாயம்’ என்ற சமஸ்கிருத வார்த்தை, தமிழில் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.
அப்போது இடைமறித்த நீதிபதி ஆர்.மகாதேவன், “விவசாயம் என்பது தமிழ் சொல் கிடையாது. அது சமஸ்கிருத சொல்தான். ஆனால், இத்தொழிலைக் குறிப்பிட தமிழில் சொல் இல்லை என்று கூற இயலாது. ‘உழவு’ என்ற தமிழ் சொல் உள்ளது” என்றார்.
இதுகுறித்து இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, “இந்த வழக்கை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு எந்த அடிப்படையில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது? என்பதற்கான ஆதார ஆவணங்களுடன், மத்திய அரசு சார்பில் தகுந்த உயரதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
சொந்தமா எழுத்துருவே (Alphabet) இல்லாத சமஸ்கிருதத்திற்கு எப்படிடா செம்மொழி அந்தஸ்து  கொடுக்க முடியும் என்று  அடுத்து ஒரு வழக்கு போட்டு கேட்கணும்!

கருத்துகள் இல்லை: