வெள்ளி, 8 ஜனவரி, 2021

நாகை: கோயிலில் வைத்து பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை

minnambalam :இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கதுவா சிறுமியையும், ஹத்ராஸ் பெண்ணையும், புதுக்கோட்டைச் சிறுமியையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பாலியல் வழக்கில் தாமதமாக நீதி கிடைப்பதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதுக்கோட்டைச் சிறுமி, வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் ஆறே மாதத்தில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் 2020 டிசம்பர் 29 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவு வெளியாகி முழுமையாக இன்னும் 10 தினங்கள் கூட ஆகாத நிலையில், நாகையில் விதவை பெண் ஒருவர்  கோயிலுக்குள்ளேயே வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது  தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து தனது இரு மகள்களுக்காகச் சித்தாள் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

கணவர் இறந்த நிலையில் அவர் நாகப்பட்டினத்தில் உள்ள தங்கை சரோஜா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆதரவில் மகள்களுடன் வசித்து வருகிறார். சித்தாள் வேலைக்குச் சென்றுவிட்டு தினசரி வீடு  திரும்பும் போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அங்கிருக்கும்  பிள்ளையார் கோயிலுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரவு வேலை  முடிந்து வழக்கம் போல் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அவரை கவனித்து வந்த இரு இளைஞர்கள் அமுதாவின் வாயை அடைத்து அந்த கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை  அவரை விடவில்லை என கூறப்படுகிறது.;‘எனக்குப் பிள்ளைகள் இருக்கிறது என்னை விட்டுவிடுங்கள்’ என்று அமுதா கதறியிருக்கிறார்.  இதையடுத்து  நடக்க முடியாமல்  ஆடை களைந்துபடி தள்ளாடிக் கொண்டு வீட்டுக்கு வந்த அமுதாவைப் பார்த்து அவரது தங்கை அதிர்ச்சியடைந்திருக்கிறார்.  நடந்ததை வெளியே சொன்னால் , ‘உனக்கு நேர்ந்ததுதான் உன் மகள்களுக்கும்’ என அந்த கொடூரர்கள் மிரட்டியதாக

சரோஜாவிடம் நடந்ததைக் கூறி அழுதிருக்கிறார் அமுதா.  

இதையடுத்து அக்கரகுளத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஆனந்தராஜ் (25), வண்டிப்பேட்டையைச் சேர்ந்த முருகன் மகன் அப்பாஸ் என்கிற அருள்ராஜ் ( 25) இருவரும்தான்  இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.  இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஊர் பஞ்சாயத்தில்  கிருஷ்ணமூர்த்தி முறையிட்டிருக்கிறார். அப்போது இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாம் என்று அவர்களை அலட்சியப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து பஞ்சாயத்தில் முறையிட்டதற்காக கிருஷ்ணமூர்த்தியைக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான அப்பாஸ் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், வேறுவழியின்றி வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

இதையடுத்து போலீசார் அந்த இரு இளைஞர்களையும் கைது செய்து, அவர்கள் மீது  கூட்டுப் பலாத்காரம், தகாத வார்த்தைகளால் திட்டியது, அச்சுறுத்தி பொருட்களை பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்   வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும் சம்பவத்தன்று அந்த பெண்ணை, குற்றவாளிகள் இருவரும் பின் தொடர்ந்து சென்ற  சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதாகவும், அதனடிப்படையிலும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்,  “மனித நேயமற்ற மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மனித மிருகங்களுக்குத் துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரமான சிகிச்சை வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக 2013ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: