திங்கள், 4 ஜனவரி, 2021

தனிச் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள்: துரைமுருகன் ஆதரவு!

minnambalam : கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் எனச் சொன்னது குறித்து துரைமுருகன் பதிலளித்தார். சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. 

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மதிமுகவின் கணேசமூர்த்தி, விசிகவின் ரவிக்குமார், ஐஜேகே பாரிவேந்தர், கொமதேக சின்ராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றனர். அதே வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற திட்டமிட்டு அதற்காக தீவிரமாகப் பணியாற்றி வருகிறது திமுக. இதனால் நிரந்தர சின்னம் இல்லாத கட்சிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட அளவு வேட்பாளர்களை திமுக உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைக்க வலியுறுத்துவதாக தகவல்கள் வந்தன.சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுகவின் தனித் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் தனிச் சின்னத்தில்தான் எங்கள் கட்சி போட்டியிடும் என அறிவித்துவிட்டார். இதேபோல விசிக தலைவர் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்தார்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட டி.கே.புரம் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது திமுகவுக்கு பாதகமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு, “ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு கொள்கை உள்ளது. ஆகவே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச் சின்னம் கோருவதில் ஏன்ன தவறு இருக்கிறது. அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார் துரைமுருகன்.

அதே நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி திமுக நிர்பந்திக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை: