வெள்ளி, 8 ஜனவரி, 2021

குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி... நேற்று நடந்தது ஒத்திகைதான்.. விவசாயிகள் அதிரடி!

dailythanthi.com : டெல்லியில் நேற்று நடந்தது ஒத்திகைதான் என்றும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 44வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே இரு தரப்பினரும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.  இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் அணி திரண்டு நேற்று டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர்.  இதன்படி, டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உள்பட டெல்லியின் நான்கு எல்லைகளில் இருந்தும் இந்த பேரணி நேற்று நடைபெற்றுது.

இதனை முன்னிட்டு, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  இதேபோன்று, முக்கிய பகுதியான சிங்கு எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.  விவசாயிகளின் டிராக்டர் பேரணியை முன்னிட்டு அரியானாவில் உள்ள குண்ட்லி-மனேசர்-பல்வால் சுங்க சாவடி பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அரியானாவில் விவசாயிகள் பல்வால் பகுதி வரை டிராக்டர் பேரணி செல்ல முதலில் முடிவு செய்திருந்தனர்.  பின்னர் இதில் மாற்றம் செய்து, நொய்டா வரை டிராக்டரில் பேரணியாக சென்று விட்டு காஜிப்பூருக்கு திரும்புவது என்று முடிவு செய்தனர்.

பேரணியை கண்காணிக்க போலீசார் போதிய அளவில் குவிக்கப்பட்டனர்.  பேரணியை வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று காசியாபாத் மாவட்டத்திற்கான கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நகரம்) சைலேந்திர குமார் சிங் கூறினார்.

இதன்பின்பு டிராக்டர் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  இதனை தொடர்ந்து பாரதீய கிசான் யூனியனை சேர்ந்த ராகேஷ் திகாய்த் கூறும்பொழுது, வருகிற 26ந்தேதி குடியரசு தின அணிவகுப்பில் நாங்களும் பேரணி நடத்துவோம்.  ஒருபுறம் பீரங்கிகள் அணிவகுக்கும்.  மறுபுறம் நாங்கள் டிராக்டர்களில் அணிவகுத்து செல்வோம் என கூறினார்.

விவசாய தலைவர்களில் ஒருவரான ராஜ்வீர் சிங் கூறும்பொழுது, டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.  நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்ல.  இதனை அரசு கவனித்திருக்கும்.  இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட பின் விவசாயி சிம்ரன்ஜீத் என்பவர் கூறும்பொழுது, நடந்து முடிந்த பேரணி ஒத்திகைதான்.  குடியரசு தினத்தில் கொண்டாட்டத்துடன் பெரிய அளவில் பேரணி இருக்கும் என கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: