செவ்வாய், 5 ஜனவரி, 2021

தேனியில் ஆணி பிடுங்கும் திருவிழா!' டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கிவைத்தார்!


Nail Picking Festival theni

nakkeeran - சக்தி : தேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் இந்த களப்பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். தேனி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் களப்பணி நடத்தினர். இதன் விளைவாக தமிழகத்தில் மரங்களில் விளம்பரப் பதாகைகள் இல்லாத முதல் நகராட்சியாக தேனி நகராட்சியை மாற்றினர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களில் இருந்து ஆணிகளைப் பிடுங்கியுள்ளனர். தேனி மாவட்ட தன்னார்வலர்களின் 'ஆணி பிடுங்கும் திருவிழா' தொடக்க நிகழ்ச்சியை திண்டுக்கல் மற்றும் தேனி சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார். 

பின்னர் தன்னார்வலர்களோடு இணைந்து மரங்களில் இருந்து ஆணிகளை அகற்றும் பணியில் அவரும் ஈடுபட்டார். தொடர்ந்து  அரண்மனை புதூர் எல்லை முடிவு வரை சாலையின் இருபுறமும் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை தன்னார்வலர்கள் அகற்றினர். மரங்களில் இருந்து ஆணிகள் அகற்றப்பட்ட இடத்தில் மஞ்சள் வேப்பெண்ணெய் கலந்த கலவையைப் பூசி மரங்களின் காயங்களுக்கு களிம்பிட்டனர்.

 

கருத்துகள் இல்லை: