திங்கள், 4 ஜனவரி, 2021

இலங்கையில் கொரோனவால் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

                    /tamil.theleader.lk :கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை உலக சுகாதார ஸ்தாபனமே முதலில் எடுத்தது இந்த விதிமுறைகள் எங்கள் நாட்டிற்கும் பொருந்தும்,கொரோனா வைரசிரனை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக நாங்கள் மாறினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தவேளை எவரும் அதற்கு எதிராக கரிசனைகளை வெளியிடவில்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் -அது பிழை என தெரிவிப்பார்கள் என்றால் கத்தோலிக்க மக்களும் அது குறித்த கரிசனையை வெளியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய மதத்திலும் உடல்களை தகனம் செய்வது அனுமதிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு இனத்திற்கு மாத்திரம் உரிய விடயமில்லை.

சிலவங்குரோத்து நிலையிலுள்ள அரசியல்கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதனை பயன்படுத்த முயல்கின்றனர் என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றம்சாட்டியுள்ளார்.

பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிபபடையில் உடல்களை தகனம் செய்யவேண்டுமா அடக்கம் செய்யவேண்டுமா என ஆராய்வதை விட நாங்கள் பொதுமக்களை கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தங்கள் வங்குரோத்து அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பல அறிக்கைகளை வெளியிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகள் குறித்து ஜனாதிபதியோ அரசாங்கமோ தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது சுகாதார அதிகாரிகளே இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ஒரு குழுவினர் இந்த விவகாரத்தினை இனரீதியிலானதாக மாற்றுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது

 

கருத்துகள் இல்லை: