திங்கள், 21 டிசம்பர், 2020

திரைத்துறையில் மட்டுமில்லை , அரசியலிலும் MGRருக்கு பொருத்தமான வாரிசாகவே இருப்பார் கமல்.

Image may contain: 1 person, closeup

சுமதி விஜயகுமார் : · பொதுவாகவே தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை எதிர்ப்பவர்கள், நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் முன்னிறுத்துவது காமராஜரை தான். அவருக்கு முன்போ பின்போ நல்லாட்சி செய்த தலைவர்கள் யாருமே இல்லையா என்ற கேள்வியை புறந்தள்ளிவிட்டு பார்த்தால், காமராஜரின் ஆட்சி ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்று கருத்து இல்லை. 

ஆனால் இப்போது புதிதாக, திரைத்துறையில் வாய்ப்பிழந்த நடிகைகள் தொலைக்காட்சிக்கு போவது போல் நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக கமல் மற்றும் ரஜினி இருவரும் முன்னிறுத்தும் தலைவர் எம்ஜிஆர். உண்மையில் கமல் ரஜினியின் நோக்கம் என்ன , உண்மையான மக்கள் தொண்டிற்காகத்தானா , அப்படியென்றால் அவர்கள் மக்களுக்காக எதனை பிரச்சனைகளில் குரல் கொடுத்தார்கள் , எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பதையும் ஒதுக்கி விடுவோம். அவர்கள் முன்னிறுத்தும் எம்ஜிஆரின் ஆட்சி எவ்வளவு சிறப்பாய் இருந்தது என்பதை பார்ப்போம். ஒருவரின் திருமண வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம். பொது வாழ்க்கைக்கு வந்தாலும் அவரது திருமண வாழ்க்கை பற்றி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.       ஆனாலும் கலைஞரின் மனைவியை ஒன்று , இரண்டு , மூன்று என்று வரிசை படுத்தும் யாரும் தவறி கூட எம்ஜிஆரின் மனைவியை பற்றி மூச்சு விடுவதில்லை.

 இரண்டு மனைவிகள் இறந்த நிலையில் எம்ஜியார் ஜானகியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது ஜானகிக்கு திருமணம் ஆகி கணவரும் உயிருடன் தான் இருந்தார். எம்ஜியார் ஜானகிக்கு எழுதிய காதல் கடிதம் கையில் கிடைக்க ஜானகி அம்மையாரின் கணவர் பெரும் பிரச்சனையை உருவாக்கி விட்டார். நள்ளிரவில் தன மகனுடன் வீட்டைவிட்டு கிளம்பிய ஜானகி எம்ஜியாருடனான திருமணத்திற்கு முன்னர் 12 ஆண்டுகள் Living Togetherரில் இருந்தார். (உண்மையில் திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவரையே காத்திருந்து திருமணம் செய்து கொண்ட எம்ஜியாரை பாராட்டியே ஆக வேண்டும்)

காங்கிரஸில் பற்று கொண்டு பின்னர் திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்ட பல கோடி மக்களில் எம்ஜியாரும் ஒருவர்.திமுகவின் பிரச்சார முகமாகவே இருந்தார் MGR. அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்து வந்த MGR அதிமுகவை துவங்கினார். பின்னர் அது அஇஅதிமுகவானது . எதனால் என்று கேட்டல் ரஜினி கமலுக்கு விடை தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தில், மாநில கட்சிகளை கலைத்து விடுவார் என்கின்ற பயத்தில் அதிமுகவை அகில இந்திய அதிமுகவாக மாற்றிய வீரம் மிக்கவர் தான் திரையில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆவார். இந்திரா காந்தி என்று இல்லை. மத்தியில் எந்த ஆட்சி இருக்கிறதோ அதற்கு எப்போதும் இணக்கமாகவே நடந்து கொள்வார்.
சர்க்காரியா கமிஷன் அனைவர்க்கும் தெரியும். பால் கமிஷன் மற்றும் ரே கமிஷன் எத்தனை பேருக்கு தெரியும். திருச்செந்தூர் முருகன் கோவிலின் உதவி ஆணையர் சுப்பிரமணியம் மர்மமான முறையில் இறக்க , அதற்கு நீதி கேட்டு கலைஞர் மதுரை இருந்து திருச்செந்தூர் வரை நடை பயணம் மேற்கொண்டார்.அந்த அழுத்தத்தின் காரணமாக எம்ஜியார் CJR Paul தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு கொடுத்த அறிக்கை அதிமுக அரசுக்கு எதிராக இருந்ததால் அந்த அறிக்கையை MGR வெளியிடவேயில்லை. பின்னர் கலைஞர் அதை வெளியிட்டார். ரே கமிஷன் அதைவிட சுவாரசியமானது.
1974 ஆம் ஆண்டு கலைஞரின் திமுக அரசு மதுவிலக்கை கொண்டு வந்தது.1981ல் MGR மது விலக்கை நீக்கினார். அதற்காக அவர் சொன்ன காரணம், கள்ள சாராயம் அதிகரிக்கிறது அதனால் பலர் இறக்கிறார்கள் என்பதே. மது ஆலை நடத்த ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே கொடுக்கப்பட்டது. உரிமைகள் அனைத்தும் அதிமுக காரர்களுக்கே கொடுக்கப்பட்டது. மது விற்பனையின் மூலம் வரும் excise வரி அதிக அளவில் உயர்ந்தது. அதாவது தன் குடிமக்களுக்கு தங்கு தடையின்றி ஊத்தி கொடுத்தது MGR அரசு. அதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் கேரள அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. அதன் படி தமிழக அரசு கெளரவிற்கு 65 லட்சம் லிட்டர் சாராயம் கொடுக்க வேண்டும். 33.50 லட்சம் லிட்டர் அனுப்பிய தமிழக அரசு கையிருப்பு இல்லை என்று நிறுத்தி கொண்டது. காலாவதியான அந்த ஒப்பந்தத்தை வைத்து கொண்டு கேரளா பெரும் புள்ளிகள் தமிழக சாராய உரிமையாளர்களிடம் கள்ள கடத்தலில் சாராயத்தை வாங்கியது. ஒருமுறை அப்படி நடந்த கள்ளக்கடத்தல் கேரளா அரசால் பிடிக்க பட, கடத்தல் கும்பலோ MGRகு 5 கோடி ருபாய் கொடுத்ததாக தெரிவித்தது. சுதாரித்து கொண்ட MGR, கமல் போல விசாரணையே அமைக்க கூடாது என்றெல்லாம் சொல்லாமல், தன் மேல் இருந்த குற்றச்சாட்டிற்கு தானே விசாரணை குழு அமைத்தார். திமுகவின் கடும் போராட்டத்திற்கு பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு மத்திய அரசு பாலின் தலைமையின் கீழ் குழு அமைத்தது.
மேற்சொன்ன இரண்டும், நேர்மைக்கும் ஊழலற்ற அரசிற்கும் MGRகும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்த உத்தமரின் ஆட்சியை தான் தாங்கள் தருவோம் என்று கமலும் ரஜினியும் கூறி வருகிறார்கள். ரஜினியாவது கட்டாயத்தின் பெயரில் வருகிறார் என்றால் காப்பியடிப்பதில் பெயர் போன கமல் இப்போது MGRரை ஏன் காப்பி அடிக்க முயல்கிறார் என்று தான் தெரியவில்லை. மேற்சொன்னவைகள் மட்டும் அல்லாமல் இன்னும் விவசாயிகள் படுகொலை , மீனவர்கள் படுகொலை, வன்னிய இடஒதுக்கீடு படு கொலைகள், கம்யூனிஸ்ட்கள் படு கொலை, மாணவர்கள் படுகொலை என்று MGRரின் ஆட்சி முழுவதும் ரத்த சிதறல்கள் உண்டு.
ஏழை எளிய மக்களின் உழைப்பு அனைத்தையும் சாராய விற்பனை மூலம் உறிஞ்சி எடுத்த MGR கல்வி துறையையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், MGRக்கு உங்களை பிடித்திருந்தால் போதும் தனியார் பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம். சாராய வியாபாரிகள் பலர் கல்வி தந்தை ஆனது MGR தயவில் தான்.
MGRரின் திரைத்துறை வாழ்க்கை முதல் பாதியில் திராவிட சித்தாந்தத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது என்றால் இரண்டாம் பாதி அனைத்தும் ஒரு குடும்பமாக பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு சில பாடல்கள் எல்லாம் இன்றைய இரண்டாம் தர படங்களை மிஞ்ச கூடியதாகவே இருக்கிறது.
கமலஹாசன் தந்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த கமல் திமுக, அதிமுக , பிஜேபியிடன் கூட்டணி இல்லை என்பதை சொன்னதும் காங்கிரஸுடனான கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் நழுவ முயன்றததற்கு என்ன அர்த்தம் என்பதை கமல் தான் விளக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வந்த கமல் காங்கிரஸ்சுடன் கூட்டணி வைக்க போகிறாரா இல்லை தனித்து போட்டியிட போகிறாரா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.அவர் பேட்டி கொடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைமுறை செய்தியில் இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அதற்கு காரணம் இங்குள்ள கட்டுமானம் தான் என்றும் செய்தி வெளியானது. அந்த கட்டுமானத்தில் MGRரின் பங்கு என்ன என்பதை கமல் விலகுவாரா என்பதை பொறித்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைத்துறையில் மட்டுமில்லை , அரசியலிலும் MGRருக்கு பொருத்தமான வாரிசாகவே இருப்பார் கமல்.

கருத்துகள் இல்லை: