செவ்வாய், 22 டிசம்பர், 2020

திமுக சுவரொட்டிகளில் பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே .. திமுக அறிவிப்பு

minnambalam : பேனர், சுவரொட்டிகள் தொடர்பாக திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேனரில் இவர்களது புகைப்படம் மட்டும்தான் : ஸ்டாலின் உத்தரவு!

சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக இப்போதே தயாராகிவிட்டது. ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளும்போதே, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும். 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கை ஸ்டாலின் நிர்ணயித்தார். நாளை முதல் 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் திமுக கிராமசபை மற்றும் வார்டு கூட்டங்களை நடத்த இருக்கிறது.

இந்த நிலையில் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 22) திமுகவினருக்கு எழுதியுள்ள மடலில், அடிமை ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களைப் பொம்மைகளாக்கி ஆட்டி வைத்து அதிகாரம் செலுத்துவோரிடமிருந்தும் இருந்தும் தமிழகத்தை மீட்கும் வகையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அதனை கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கையாக செலுத்த வேண்டும். அதற்கான செயல் திட்டமே இலக்கும் - நோக்கும் 200 என்பது” என்றார்.

கிராம சபை கூட்டங்களில் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்திய அவர், விரிவான செயல்பாடுகளுக்காகவும், பணிச் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அண்மையில் சில மாவட்டக் கழக நிர்வாகங்கள் பிரிக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் 77 கழக மாவட்டங்கள் உள்ளன. இவையே தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான மாவட்டங்களாகும். நிர்வாக வசதிக்காக மேலும் மாவட்டங்களைப் பிரிப்பது என்பது, தேர்தல் களத்தில் கழகம் மகத்தான வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் என்றார்.

மேலும், காலையிலேயே கிராமம், வார்டுகள் வாரியாக வீடு வீடாகச் செல்லுதல்; குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். பத்தாண்டுகளாகத் தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக ஆட்சி மீதான குற்றப் பத்திரிகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கிட வேண்டும் என்ற ஸ்டாலின், “பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது” என உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் திமுகவினரின் சுவரொட்டிகள், விளம்பரங்களில் கலைஞருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுபற்றி திமுக தலைவருக்கு நிறைய முறையீடுகள் சென்றுள்ளன. மேலும் உதயநிதிக்கு விளம்பரங்களில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து கனிமொழி எம்பியும் வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் வீண் சர்ச்சைகளைத் தவிர்க்க அண்ணா,கலைஞர், ஸ்டாலின் படங்களைத் தவிர வேறு யாரின் படங்களும் இடம்பெறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் திமுக தலைவர்.

எழில்

 

கருத்துகள் இல்லை: