வெள்ளி, 25 டிசம்பர், 2020

கொரோனா தடுப்பூசி ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ... 4 மாநிலங்களில் ஒத்திகை!

minnambalam : இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன. அமெரிக்காவின் பிஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசிக்கு இந்தியாவின் ஒப்புதலுக்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து புனேவின் சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, பரிசோதனை மேற்கொண்டு வரும் கோவிஷீல்டு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்காக கொண்டுவர இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கேட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கோவிட்-19 தடுப்பூசி அறிமுகம் மற்றும் வெளியிடுவதற்கான, மனித வளத்தின் திறனை வலுப்படுத்த, மருத்துவ அதிகாரிகள், தடுப்பூசி போடுபவர்கள், மாற்றுப் பணியாளர்கள், குளிர்ப் பதனக்கிடங்குகளை கையாளுபவர்கள், மேற்பார்வையாளர்கள், தரவு மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகை தடுப்பூசி கையாளுபவர்கள், ஆஷா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விரிவான பயிற்சித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் நிகழ்ச்சிகளை நடத்துதல், முழு தடுப்பூசி செயல்முறையை நிர்வகிப்பதற்கான தகவல் தொழில்நுட்ப தளத்தைப் பயன்படுத்துதல், பணியாளர்களை நியமித்தல், குளிர்ப் பதனக் கிடங்குகளின் தயார் நிலை, பாதகமான நிகழ்வுகளின் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு, உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை, தொற்றுத் தடுப்பு நெறிமுறைகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தேசிய அளவிலான பயிற்சியில், மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 2,360 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது வரை, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மாநில அளவிலான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் மாவட்ட அளவில் 7,000க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றுள்ளனர். 17,831 வட்டாரங்களில் 1399பகுதிகளில், தடுப்பூசி போடும் குழுவினருக்கான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. மற்ற வட்டாரங்களில் பயிற்சிகள் நடந்து வருகின்றன.

கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தயார் நிலை நடவடிக்கையாக, ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒத்திகை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள அரசுத்துறை மற்றும் தனியார் துறை மருத்துவமனைகளில் இந்த ஒத்திகை மேற்கொள்ளத் திட்டமிடப்படும். இது கோவிட்-19 தடுப்பூசி போடும் முறையைப் பரிசோதிக்க உதவும். டிசம்பர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் இந்த ஒத்திகை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: