வெள்ளி, 25 டிசம்பர், 2020

குயிலி வீரமாகாளியாகவும் தீப்பாஞ்ச அம்மனாகவும் வணக்கப்படுகிறாள்

No photo description available.
Sundar P : · ‘குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி’ என்ற நூலிலிருந்து ..... முத்துவடுகநாதர் கொலைக்குப்பின்னர் விருப்பாச்சியில் வேலுநாச்சியாரின் படைகள் போர்பயிற்சி மேற்கொள்கின்றன. அப்போது சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் குயிலியை அழைத்து நீ என்ன சாதி? என்று வினவுகிறார். குயிலி, "நான் சாம்பான் சாதி" என்று கூறுகிறாள். தாழ்ந்த சாதிப் பெண், தாழ்வு மனப்பான்மையுடன் கட்டளைக்குக் கீழ்படிந்து நடப்பாள். அதை பயன்படுத்தித் தன் திட்டத்தை நிறைவேற்ற படிப்பறிவில்லாத குயிலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கணக்கிட்டுக் கொண்டு வேலுநாச்சியாரின் இருப்பிடம், படை பலம் குறித்து தான் எழுதிய ஒரு கடிதத்தை கொடுக்கிறார் சிலம்பு வாத்தியார். கடிதத்தை மல்லாரி ராயன் எனும் ஆங்கிலேய அடிமையிடம் கொண்டு சேர்க்கவும் உத்தரவிட்டார் வெற்றிவேல்..
கடிதத்தை வாங்கிக்கொண்டு , தன் குடிலுக்குச் சென்று படித்துப் பார்த்த குயிலி குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் நோக்கி விரைகிறாள். சிலம்பு வாத்தியாரை குத்தீட்டியால் குத்திக் கொல்லுகிறாள் குயிலி
இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்பு வாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியை வேலுநாச்சியார் உள்ளிட்ட அனைவரும் காண்கிறார்கள்.
குயிலி வேலுநாச்சியாரிடம் கடிதத்தை நீட்டினாள்.
கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் கோபத்தில் துடித்தது.
நம்பிக்கைக்குரியவராக எண்ணியிருந்த சிலம்பு வாத்தியார் ஒரு நச்சுப்பாம்பு என்று அறிந்த வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார்.
தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார்.
கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
குயிலி படிக்கத் தெரிந்தவள். அறிவும் விவேகமும் நிறைந்தவள்.
குயிலி சிலம்பு வாத்தியாரைக் கொன்றதால் சில சாதிவெறியர்கள் சிவகங்கையில் மல்லாரிராயன் தலைமையில் சாதிக்கலவரத்தைத் தூண்டுகின்றனர்.
ஆதலால் குயிலியின் பாதுகாப்பிற்காக வேலுநாச்சியார் அவளை தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார்.
சிவகங்கைச் சீமையின் விடுதலைக்காகவும் வேலுநாச்சியாரின் வெற்றிக்காகவும் உயிர்நீத்தக் குயிலி பிறந்த ஊர் ‘பாசாங்கரை’ எனும் கிராமம்.
இது சிவகங்கையிலிருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் மேற்கு திசையில் அமைந்துள்ளது. பறையர், முத்திரையர், பிள்ளைமார் ஆகிய மூன்று சாதியினரே வசிக்கின்றனர்.
குயிலி குறித்த ஒலைச் சுவடிகள் எங்கு இருக்கின்றது அல்லது மறைக்கப்பட்டதா என்றெல்லாம் ஆய்வுகள் நடந்து வருகின்றது. அவைகள் கிடைத்தால் குயிலி குறித்து இன்னும் அதிகளவில் அறிய முடியும்.
சிவகங்கை அரண்மனையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து அமைந்திருக்கும் இடம் பொன்னாங்குளம். இதனருகேதான் வீரமங்கைக் குயிலிக்கு கோவில் வைத்து வழிபட்டு வருவதாக ஆலம்பட்டு சோ. உலகநாதன் அவர்களின் வரலாற்று ஆய்வு நூலின் வழி அறிய முடிகின்றது.
உலகநாதன் அவ்வூர் மக்களிடம் பேசியபோது, “அரண்மனையில் யாரோ தீக்குளித்தார்களாம். அது ஒரு கன்னிப் பெண்ணாம். தீக்குளித்தக் கன்னிப் பெண்ணை அரண்மனையார் இங்கே புதைத்துள்ளார்களாம் இந்தக் கோவிலுக்குப் பெயர் தீப்பாஞ்ச அம்மன்” மேலும் “இது மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். அந்தப் பக்கம் கால் நீட்டிப் படுக்கக்கூட அனுமதிக்காது. அதை நாங்கள் வழிபட்டு வருகிறோம்” என்று கூறினார்களாம்.
1780-களில் வேலுநாச்சியாரின் வெற்றிக்காக அரண்மனைப் போரில் மனித வெடிகுண்டாக மாறித் தீப்பாய்ந்து உயிர்நீத்த குயிலியின் தியாக வரலாற்றை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.
குயிலியின் வீரச் செயல்கள் குறித்தும் பிறப்பு குறித்தும் திரு. கல்லல் அன்பழகன் அவர்களின் இணையச் செய்தி வாயிலாகவும் சில செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.
தீண்டாமைக் கொடுமையால் கோவிலுக்குள் போக முடியாமல் இருந்த மருதாணி (மருதாயி) என்ற குடும்பர் சாதிப் பெண்ணையும் குயிலியையும் மருதிருவரையும், நாத்திகக் கவிஞன் வைரவனையும் கி.பி.1780-இல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கூட்டி சென்றார் வேலு நாச்சியார்.
குயிலிக்காகத் தன் சொந்த சாதியினரை எதிர்த்தார் வேலு நாச்சி. ஏழு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையில் தன்னுடனே தனியறையில் குயிலியைத் தங்க வைத்துக் கொண்டார்.
குயிலி வீரமாகாளியாகவும் தீப்பாஞ்ச அம்மனாகவும் வணக்கப்படுகிறாள்.
குயிலி கும்மிப் பாடல்களும் சிலவிடங்களில் பாடப்படுகின்றது.
வீரத்தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வேலுநாச்சியார் நினைவு மண்டப வளாகத்திலேயே வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னத்தினை தமிழக அரசு 19.07.2014 அன்று திறந்து வைத்தது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது எந்த நூலில் இருந்து எடுத்து எழுதி உள்ளீர்கள் சகோ

Radha manohar சொன்னது…

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid026K7GpkAFEs5PZLn3nKQssLoQzCMrr1G7T8S95bdR2ZS2i76uBfrnk8gDrSjz6ZHXl&id=100008979670272