திங்கள், 21 டிசம்பர், 2020

அதிமுக தலைமையகத்தில் மோதல் ! பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் எதிர்ப்பு!

 

dinakaran :  இபிஎஸ்சுடன் கடும் வாக்குவாதம் * மூத்த தலைவர்கள் பஞ்சாயத்து ..சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக நடந்த விவாதத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர் கொள்வது குறித்து அதிமுக தலைவர்கள பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து அதிமுக, பாஜ கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக பாஜ மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கடந்த மாதம் தமிழகம் வந்து அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் பாஜ தலைவர்கள் பட்டியல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், 2011ம் ஆண்டு தேர்தல் போன்று தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமகவும் குறைந்தபட்சம் 50 இடங்களை கேட்கும் என்று கூறப்படுகிறது.



இப்படி, கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதால், அவர்களை எப்படி சமாளிப்பது, கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்கலாம், சட்டமன்ற தேர்தலை சந்திப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க, அதிமுக ஆலோசனை கூட்டம் கடந்த 15ம் ேததி நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்க வேண்டும் என்பது குறித்தும், பாஜ கேட்டுள்ள தொகுதி விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பட்டியலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கட்சி தலைமையிடம் வழங்கினர்.

பூத் கமிட்டியில் அதிக அளவில் பெண்களுக்கு இடம் அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக கட்சி சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று கிறிஸ்த்துமஸ் விழா நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பேசும்போது, ‘‘அதிமுகவின் அடிப்படை கொள்கையே சிறுபான்மையினர் மக்களை காப்பது தான். அதில் இருந்து கட்சி ஒருபோதும் பின் வாங்காது. கூட்டணி என்பது வேறு. கட்சியின் கொள்கை என்பது வேறு. நாங்கள் பாஜவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும், சிறுபான்மையினிரின் நலனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அவர்களின் நலனை எந்த விலை கொடுத்தும் காப்போம்’’ என்று பேசினார். அப்போது, மேடையில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் உள்பட சிலர் முதல்வரின் பேச்சால் அதிருப்தி ஏற்பட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும்
ஜெ.சி.டி. பிரபாகர், மோகன் உள்பட சில முக்கியஸ்தர்கள் மட்டுமே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர். அப்போது, ‘‘கிறிஸ்துமஸ் விழாவில் தேர்தல் பிரசாரத்தை கட்சிக்கு சொல்லாமல் எப்படி பேசலாம்.

தேர்தல் பிரசாரம் குறித்து முறைப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து தானே அறிவிக்க வேண்டும். நீங்கள் எப்படி பேசலாம்’’ என்று ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பினார். ‘‘ஒரு நிகழ்சியில் தேர்தல் சமயத்தில் இதுபோல பேசுவது தவறு இல்லை. இதை ஏன் பிரசாரமாக எடுத்து கொள்கிறீர்கள்’’ என்று எடப்பாடி பதில் அளித்ததாக தெரிகிறது. அப்போது, அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை டிசம்பர் மாதம் நடத்த வேண்டும் என்று எடப்பாடி கூறினார். அவருக்கு ஆதரவாக தங்கமணி, வேலுமணியும் அதே கருத்தை வலியுறுத்தினர். மேலும் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டினால் தான் தொண்டர்களின் பல்சை பார்க்க முடியும்.

அவர்களையும் தேர்தல் நேரத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இதன் மூலம் அதிமுகவின் தேர்தல் பணிகள் வேகமாக தொய்வில்லாமல் நடக்கும். அதற்கு நிர்வாகிகளை நாம் நேரில் சந்திக்க வேண்டும். அவர்கள் நம்மை சந்தித்தால் அவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும் என்றார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், கொரோனா காலமாக இருப்பதால் தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்து காலஅவகாசம் கேட்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அப்படி அனுமதி வாங்கி இருக்கிறோம் என்று சொன்னாராம். ஆனால் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்ததற்கு வேறு காரணத்தை தொண்டர்கள் கூறுகின்றனர்.

கடந்த முறை பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, 12 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறி அந்த கூட்டத்துக்கு ஓபிஎஸ்சை அழைத்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அமைச்சர் செங்கோட்டையன் அந்த பொதுகுழுவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான கேள்வி எழுப்பினார். அதேபோல இந்த கூட்டத்திலும் தனக்கு எதிராக ஏதாவது பேசிவிட்டால் தனக்கு பிரச்னையை உண்டாக்கும் என்று எதிர்பார்த்தே, ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு ெதரிவித்தார். பொதுக்குழுவில் தனக்கு எதிராக காய் நகர்த்தப்பட்டால் அது சீட் பங்கீடு உள்பட பலவற்றில் பாதிப்பு ஏற்படும். அரசியலில் தன் கை தாழ்ந்துவிடும் வாய்ப்பு உள்ளதாக சந்தேகப்பட தொடங்கினாராம்.

வாக்குவாதம் முற்றியதால் முன்னாள் அமைச்சர் மோகன் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போது, ஜெசிடி பிரபாகரன், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் இதை அப்புறம் பேசிக் கொள்ளலாம். நேரம் கடந்து விட்டது என்று கூறி பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தனர். இந்த கூட்டம் இரவு 8 மணி முதல் 10.50 வரை தொடர்ந்து நடந்தது. இந்த தகவல் பரவியதும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: