திங்கள், 6 ஜனவரி, 2020

“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”

timestamil:  ஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார்.
கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள்?
பதில்: கௌகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, படித்தேன். முதலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், பின்பு இளைஞர் பெருமன்றத்தி்லும் பணியாற்றினேன். அப்போது இருந்த தலைவர்கள் என்னை தொழிற்சங்க அரங்கத்தில் பணியாற்றச் சொன்னார்கள். மறைந்த திபங்கர் தத்தா எனக்கு குரு. 1992 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் அரங்கத்திலும், பிறகு அமைப்புச் சாரா அரங்கத்திலும் பணியாற்றி னேன். இப்போது ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளராக இருக்கிறேன். 1994 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானேன். இப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன்.

ரெமன்தாஸ்
கே: அசாம் மாநிலத்தின் சிறப்பு பற்றி சொல்லுங்களேன்?< ப: அசாம் மாநிலத்தில் நான்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு இருக்கும் வாயு சுத்திகரிப்பு நிலையம் (gas based refinery)ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஆலையாகும். இங்கு நீர்வளம் அதிகம். இந்தியாவின் நீளமான நதியான பிரம்மபுத்திரா இங்கு ஓடுகிறது. இதிலிருந்து நீர்மின்சாரம் உற்பத்தி ஆகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான 80 சத மின்சாரத்தை அசாம் உற்பத்தி செய்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற, இயற்கையான காடுகள் அசாம் மாநிலத்தில் உள்ளன. இதிலிருந்து மரச் சாமான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இரும்புத்தாது, நிலக்கரி போன்ற கனிம வளங்கள் அதிக அளவில் அசாமில் கிடைக்கிறது. இப்போது இந்தியாவில் முதன்முதலாக, அசாமில் உயிரி சுத்திகரிப்பு நிலையம் (Bio refinery) நிர்மாணிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் மூங்கிலில் இருந்து எரிபொருள்(எதனால்) உற்பத்தி ஆகும். இது வாகனங்ளுக்கு எரிபொருளாக பயன்படும்.இதனால் அந்நியச் செலாவணி மிச்சமாகும். இயற்கை வளங்கள், கனிம வளங்கள் அசாமில் அதிக அளவு கிடைத்தாலும் இம் மாநிலத்தை மத்தியில் ஆட்சி செய்த அரசுகள் கண்டு கொள்ளவில்லை. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, இப்போது உள்ள பாஜக அரசாக இருந்தாலும் சரி.
கே: மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் ?
ப: நிறைய தொழிற்சாலைகளை அசாமில் நிறுவ வேண்டும் என்று கோரி வருகிறோம். ஏற்கனவே இருக்கும் ஆலைகளை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த ஆலைகளில் உள்ளூரில் உள்ள அசாம் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். வேலையற்ற அசாம் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் இயற்கை வளங்களுக்கு உண்மையான பங்குத்தொகை (royalty) தர வேண்டும். அசாம் மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள்; உதிரியாக இருக்கிறார்கள்; அவர்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
கே: தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி… ?
ப: 1979 முதல் 1983 வரை அசாம் மாணவர்களும்,இளைஞர்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தை நடத்தினார்கள். இதனை காங்கிரஸ் அரசு மூர்க்கமாக எதிர் கொண்டது. இந்தப் போராட்டங்களில் 855 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக 1985 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கையெழுத்து இட்ட ‘அசாம் ஒப்பந்தம்’ உருவானது. அசாம் மாநிலத்தில் குடியிருக்கும் வெளிநாட்டினரை பற்றி இந்த ஒப்பந்தம் பேசுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி 25.3.1971 ஆம் நாளை கணக்கிடும் நாளாகக் (cut of date) கொண்டு அதற்கு பின்பு அசாமில் குடியேறியவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காகதேசிய மக்கள் தொகை பதிவேட்டை உருவாக்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தம் அசாம் மக்களின் தனித்தன்மை, கலாச்சாரம், வன உரிமைகளை பாதுகாக்க உறுதியளித்தது.
ஆனால் 2005 ஆம் ஆண்டு வரை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணி தொடங்கப்படவில்லை. பிறகு இதற்கான பூர்வாங்க வேலைகளை காங்கிரஸ் அரசு செய்தது. 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் நேரடியான வழிகாட்டுதலின் கீழ் தேசிய மக்கள் பதிவேட்டிற்காண பணிகள் முழு வீச்சில் நடந்தன; தேசிய குடிமக்கள் மசோதா தாயாரானது.
அதன்படி 2019 செப்டம்பர் மாதம், 40 இலட்சம் பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அசாமில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர்கள் தொடர்பு அலுவலரிடம் (nodal officer) முறையிட்ட பின்பு 19 இலட்சம் பேர் அத்துமீறி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்திடம் (foreigners tribunal) முறையீடு செய்ய வேண்டும் என்று இருக்கும் போதுதான் இப்போது பாஜக அரசு தற்போதய தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
கே: தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் அசாமியர்களுக்கு என்ன பாதிப்பை கொண்டு வரும் என்று நினைக்கிறீர்ரகள் ?
ப: இந்தச் சட்டம் அசாம் ஒப்பந்தத்திற்கு விரோதமானது. அசாம் ஒப்பந்தம் 25.3.1971 க்கு முன்பு குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. ஆனால் இப்போது பாஜக கொண்டு வந்துள்ள சட்டப்படி கணக்கிடும் தேதியானது 31.12.2014 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வங்க தேசத்தில் இருந்து, மேற்கு வங்காளத்தில் இருந்து அசாமில் குடியேறும் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அசாமியர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையினராக மாற்றப்பட்டு விடுவோம் என அஞ்சுகின்றனர். தங்கள் அடையாளம் பறிபோகும்; தங்கள் வேலைவாய்ப்பு பறிபோகும்; அலுவல் மொழியாக வங்காளம் மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். எனவே இராணுவத்தை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களின் போராட்டம் நூறு சதம் நியாயமானது. இதுவரை இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி உள்ளனர்.
கே: இந்த போராட்டத்தை ஏஐடியுசி எப்படி பார்க்கிறது ?
ப: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சினையை தெளிவாக புரிந்து கொண்டுள்ளது. கணக்கிடும் தேதியாக 25.3.1971 ஐ கட்சி கொடுத்த ஆலோசனையைத்தான் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது. நமது ஏஐடியுசி தோழர்களும்,கட்சி தோழர்களும் போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். மத்திய அரசு இந்தச் சட்டத்தை கைவிட வேண்டும்.இது அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மதரீதியில் மக்களை பிளவுபடுத்தக் கூடியது.
இப்போது உரிய ஆவணம் இல்லாமல் இருக்கும் 19 இலட்சம் பேரில் 12 இலட்சம் பேர் இந்துக்கள். கணக்கிடும் தேதியை மாற்றி 12 இலட்சம் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுப்பதன் மூலம் அவர்களை அப்படியே தங்களின் வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்ளமுடியும் என பாஜக நம்புகிறது. அசாம் மக்களின் உணர்வுகளை அது புரிந்து கொள்ள தயாராக இல்லை. குரூரமாக (cruel) நடந்துகொள்கிறது.
கே: இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் ?
ப: வங்க தேசத்தில் இப்போது இந்துக்கள் நல்ல நிலமையில் இருக்கின்றனர். அங்குள்ள அரசாங்கத்தில் மூன்று, நான்கு பேர் அமைச்சர்களாக உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவில் இந்துக்கள் வெற்றி பெற்றுள்ளனர். வியாபாரத்தில் முன்னிலையில் உள்ளனர். அங்குள்ள அவாமி லீக் கட்சியைச் சார்ந்த ஷேக் ஹசீனாவின் அரசு மதச் சார்பற்ற அரசாக உள்ளது. ஆனால் இந்த சட்டம் வந்த பிறகு வங்க தேசத்தில் உள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அங்குள்ள இந்துக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை சொல்லி பிரச்சாரம் செய்து அவர்களை இந்தியாவிற்கு துரத்தி விடுவார்கள். முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் வங்க தேசத்தில் இனி வரும் தேர்தலில் இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சட்டம் வங்க தேசத்தில் உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

வங்க தேச இந்துக்கள்…

பாஜக மிகப் பெரிய தவறு இழைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இப்போதுதான் தீவிரவாதம் குறைந்து அமைதி திரும்பி உள்ளது. இந்தச் சட்டத்திற்கு பிறகு அங்கு மீண்டும் தீவிரவாதம் மோலோங்கும்.
 அசாம் மாநிலத்தில் ஏஐடியுசி எப்படி இருக்கிறது ?ப: அசாமில் ஏஐடியுசி ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. எண்ணெய், மின்சாரம், நிலக்கரி, அமைப்புச் சாரா துறைகளில் நமது சங்கம் நன்கு செயல்படுகிறது. தொழிலாளர் துறை அதிகாரிகள் நம்மை மதிக்கிறார்கள். ஏஐடியுசியில் இரண்டு இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.புதிய சங்கங்கள் வருகின்றன. நமது போராட்டம், தொடர்ச்சியான செயல்பாடுகளினால் சமீப காலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இப்போது உள்ள பாஜக அரசு பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனம் 30,000 கோடி ரூபாய்களை அரசுக்கு ஈவுத்தொகையாகவும், வரியாகவும் தருகிறது. இதை தனியாருக்கு விற்பனை செய்தால் அதன் துணை நிறுவனமான(subsidiary), NRL(Numaligarh Refinery Limited) என்ற எண்ணெய் நிறுவனமும் தனியார் வசம் போய்விடும். அசாம் ஒப்பந்தத்தினால் உருவான இரண்டு எண்ணெய் நிறுவனங்களில் NRL-ம் ஒன்று. இதனை ஏஐடியுசி எதிர்த்துப் போராடி வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு 80 சத மின்சாரத்தை தரும் NEEPCO (North East Electric Power Corporation) என்ற நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய பாஜக முனைந்துள்ளது. பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை போக்க இது போன்ற லாபம் தரும் நிறுவனங்களை விற்கிறது.
இத்தகைய கொள்கைகளை எதிர்த்து அகில இந்திய அளவில் நடைபெற உள்ள ஜனவரி 8 ம் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம். முழு கடையடைப்பாக மாற்றுவோம்.
நன்றி: ஜனசக்தி டிசம்பர் 22-28, 2019.

கருத்துகள் இல்லை: