சனி, 11 ஜனவரி, 2020

BBC : உக்ரைன் விமான விபத்து: ’விமானத்தை நாங்கள் சுடவில்லை’ - இரான்

புதன்கிழமையன்று விபத்துக்குள்ளான உக்ரைன் பயணிகள் விமானத்தை இரானின் ஏவுகணைகளில் ஒன்றுதான் தாக்கியது என்ற குற்றச்சாட்டை இரான் மறுத்துள்ளது. இரானின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தலைவர், நிச்சயமாக அந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தரையிலிருந்து விண்ணில் பாய்ந்து செல்லும் ஏவுகணை தவறுதலாக விமானத்தை தாக்கிய ஆதாரம் தங்களிடம் இருப்பதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கூறியதற்கு பதிலாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டெஹ்ரானில் விமானம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்படுவது போன்ற புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் 176பயணிகளுடன் சென்ற உக்ரைனை சேர்ந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
அந்த விமான போர்விமானம் என்று தவறுதலாக கருதப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அந்த விமானத்தில் இரானை சேர்ந்த 82 பேர், கனடாவை சேர்ந்த 63 பேர், யுக்ரைனை சேர்ந்த 11 பேரும், ஸ்வீடன், பிரிட்டன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனியை சேர்ந்தவர்களும் பயணம் செய்தனர்.

இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்படும் என இரான் உறுதியளித்திருந்தது.
ஆனால் பள்ளம் தோண்டு கருவியை கொண்டு விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை அகற்றும் பணி நடைபெறுவது போன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன; அது காட்சியங்களை அழித்திருக்கக்கூடும் என்ற அச்சங்களும் எழுந்தன.
இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டி வெள்ளிக்கிழமையன்று திறக்கப்படும் என இரானின் செய்தி முகமை ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் உள்ள தகவல்களை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்வோம் என்றும் அதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் இரான் தெரிவித்துள்ளது. `
கருப்புப் பெட்டியின் தகவல்கள் கிடைத்தால் பல முக்கிய விஷயங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.

மேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன?


படத்தின் காப்புரிமை AFP
தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.
அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'தோர் எம்-1' ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.

இரான் கூறுவது என்ன?

விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்கா அல்லது விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனத்துக்கு தர முடியாது என்று கூறியுள்ளது இரான் அரசு. எனினும் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பான விசாரணையில் போயிங் பங்கேற்கலாம் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்து கிளம்பி மேற்கு நோக்கிச் சென்ற அந்த விமானம், கிளம்பிய சற்று நேரத்தில் வலப்பக்கம் திரும்பி மீண்டும் விமான நிலையம் வர முற்பட்டதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி ஆபேத்சாடே கூறியுள்ளார்.
விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் அதில் தீ பற்றியிருந்ததை சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். திரும்பும் முன்னர் அலி காமேனி விமான நிலையத்துக்கு அபாய உதவிகள் கோரி விமானி எந்த அழைப்பையும் விடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறுவது அறிவியல்பூர்வ தர்க்கமற்றது என்றும் அவர் மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: