செவ்வாய், 25 டிசம்பர், 2018

தாயை கொலை செய்த மாணவி .. காதலை கைவிட கூறியதாலாம்

தாயை கொலை செய்தது ஏன்? - கல்லூரி மாணவி வாக்குமூலம்மாலைமலர் : காதலை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த தாயார்
உயிரோடு இருந்தால் காதலனுடன் சேரமுடியாது என்பதால் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். கொலையுண்ட பானுமதி - மகள் தேவிபிரியா< திருவள்ளூர்:< திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி பானுமதி (வயது 50). இவர்களது 2-வது மகள் தேவிபிரியா (19). பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு மணிக்கணக்கில் பேசினர். நாளடைவில் இது காதலாக மாறியது.
சுரேஷ் செங்குன்றம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் சென்னைக்கு வந்தபோது மின்சார ரெயிலில் தேவி பிரியாவை அடிக்கடி சந்தித்து வந்தார்.

இந்த காதல் விவகாரம் தேவி பிரியாவின் தாய் பானுமதிக்கு தெரியவந்ததும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காதலை கைவிடும்படி மகளை வற்புறுத்தி வந்தார்.

ஆனால் இதனை தேவி பிரியா கண்டுகொள்ளவில்லை. தேவிபிரியாவுக்கும் சுரேசுக்கும் பேஸ்புக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நண்பர்களாக இருந்தனர்.

அவர்கள் தங்களது காதலுக்கு உதவுமாறு விக்னேஷ், அஜித்குமாரிடம் கேட்டு இருந்தனர். மேலும் தாய் பானுமதியை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற தேவிபிரியா திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக கடந்த 15-ந் தேதி தேவிபிரியாவும், காதலன் சுரேசும் முன் கூட்டியே திட்டமிட்டனர். தடா பகுதியில் இருவரும் சந்தித்து பேசி தங்களது திட்டத்தை வகுத்தனர்.

அதன்படி நேற்று மாலை தேவிபிரியா பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகிய அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த தேவிபிரியாவும், நண்பர்கள் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பானுமதியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அஜித்குமார், விக்னேசை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

தேவிபிரியா, அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தாய் பானுமதியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தேவி பிரியா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காதலன் சுரேஷ்

கல்லூரிக்கு மின்சார ரெயிலில் செல்லும்போது சித்தூரை சேர்ந்த சுரேசுடன் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் இதனை அறிந்த தாய் பானுமதி எங்களது காதலை கைவிடுமாறு தொடர்ந்து கூறி வந்தார்.

அவர் இருந்தால் காதலனுடன் சேர முடியாது என்று நினைத்தேன். இதுபற்றி சுரேசிடம் கூறி வந்தேன். இதற்கிடையே ‘பேஸ்புக்’ மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள்.

அவர்களிடம் எங்களது காதல் நிலைமை குறித்து தெரிவித்தோம். இதையடுத்து அவர்கள் காதலுக்கு உதவுவதாக கூறினார்கள். இதுபற்றி காதலன் சுரேசிடம் கூறி நாங்கள் 4 பேரும் தாய் பானுமதியை தீர்த்துக்கட்டி விடலாம் என்று முடிவு செய்தோம். இதற்காக பேஸ்புக் நண்பர்களான அஜித்குமார், விக்னேஷ் மூலம் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி தாய் பானுமதியை கொலை செய்ய திட்டமிட்டோம்.

இதுபற்றி அவர்களிடம் கூறியபோது ஒப்புக் கொண்டனர். திட்டமிட்டபடி நேற்று காலை அஜித்குமாரும், விக்னேசும் திருவள்ளூர் வந்தனர். வீட்டில் தாய் பானுமதியும், அக்காள் சாமுண்டீஸ்வரியும் இருந்தனர். மதியம் சாப்பிட்டு விட்டு தாய் பானுமதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அக்காள் சாமுண்டீஸ்வரி இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி அஜித்குமாரையும் விக்னேசையும் வீட்டுக்குள் வரவழைத்தேன்.

அவர்கள் வீட்டில் இருந்த நகையை எடுப்பதுபோல் நாடகமாடினார்கள். நானும் பயந்ததுபோல் கூச்சலிட்டேன். இதனைக் கேட்ட தாய் பானுமதி அறைக்குள் வந்ததும் கத்தியால் குத்தி கொன்றோம்.

பின்னர் அஜித்குமாரும், விக்னேசும் வெளியே தப்பி ஓடினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டனர். ரத்தக்கறையுடன் இருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து விட்டனர். இதனால் நானும் சிக்கிக் கொண்டேன். போலீசார் எங்கள் 3 பேரையும் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பானுமதி கொலைக்கு தேவிபிரியாவின் காதலன் சுரேஷ் மூளையாக செயல்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. டி.எஸ்.பி. கங்காதரன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று ஆந்திரா சென்றனர். அவர்கள் தடா பகுதியில் பதுங்கி இருந்த சுரேசை கைது செய்தனர்.

இன்று அதிகாலை அவரை திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கொலையை அரங்கேற்ற சுரேஷ் வராதது ஏன்? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கைதான தேவிபிரியா, காதலன் சுரேஷ், பேஸ்புக் நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகிய 4 பேரையும் இன்று மாலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

தேவிபிரியா காதலில் விழுந்தது முதல் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை என்று தெரிகிறது. கடந்த 6 மாதமாக அவர் காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றி இருக்கிறார். இதனை அறிந்த பின்னரே தாய் பானுமதி மகளை கண்டித்தார்.

தனது கண்டிப்பு மூலம் மகளை திருத்தி விடலாம் என்று முடிவு செய்த அவர் கணவர் திருமுருகனிடம் இதுபற்றி கூறாமல் இருந்தார்.

பானுமதி கொலை செய்யப்பட்ட பின்னரே திருமுருகனுக்கு மகளின் காதல் விவகாரம் தெரியவந்தது. அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. #StudentArrested

கருத்துகள் இல்லை: