வியாழன், 27 டிசம்பர், 2018

இரத்த பரிசோதனையில் அரசு அலட்சியம் .. மொத்த செலவே 1000 ரூபாய்தான் ..

மருத்துவர் புகழேந்திஅரசு மருத்துவமனைராம் பிரசாத் -விகடன் : விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனை சென்றுள்ளார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தற்போது அரசு மருத்துவமனை குறித்த அச்சத்தைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி, “சாத்தூரைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணிப்பெண் ரத்த சோகைக்காக, முறையாகப் பரிசோதிக்கப்படாத ரத்தம் அரசு மருத்துவமனையில் ஏற்றியதின் விளைவாக ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் கருவில் உள்ள குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி தொற்றும் மஞ்சள் காமாலையும் ஏற்பட நிச்சயம் வாய்ப்புள்ளது. அவருக்கேகூட மஞ்சள் காமாலை தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இச்சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த விதி மீறல்கள்:
1. ரத்தம் கொடுத்த நபர் ஏற்கெனவே 2016-ல் ரத்தம் கொடுத்தபோது அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டும். விதிமுறைகளை மீறி அவருக்குத் தெரியப்படுத்தாமல்விட்டது.
2. இந்த வருடம் ரத்தம் கொடுத்த பின் `பாதுகாப்பானது’ என உறுதி செய்ய உரிய பரிசோதனைகளைச் செய்யாமல் விட்டது.
3. சாத்தூர் மருத்துவமனையிலேயே அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதைத் தெரியப்படுத்தாமல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் காலதாமதமாகத் தெரிவித்தது.

இதன் காரணமாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை மருத்துவமனை ஊழியர்கள் மீது இரண்டு பிரிவுகளில் IPC -269, 338 வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 284 ரத்த வங்கிகள் உள்ளன. விருதுநகரில் அரசு சார்பில் 2 ரத்த வங்கிகளும் தனியார் சார்பில் 2 ரத்த வங்கிகளும் 7 ரத்த சேமிப்பு நிலையங்களும் உள்ளன. தமிழகத்தில் ஒரு வருடத்துக்கு 12 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றப்படுகிறது. ஒரு வருடத்துக்கு 8 லட்சம் பேர் ரத்த தானம் செய்கின்றனர். ரத்தத்தில் கிருமி தொற்று உள்ளதா என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டே ரத்தம் ஏற்றப்படுகிறது.
ரத்தம் ஏற்றிக்கொள்வது 100 சதவிகிதம் பாதுகாப்பானதுதான் என்று சொல்ல முடியாவிட்டாலும், தானாக முன்வந்து ரத்தம் கொடுப்பவர்களைப் பற்றி முறையான மருத்துவ விவரங்களைக் கேட்டுப் பதிவு செய்வது முறையான சரியான தொழில்நுட்ப உதவியுடன் கூடிய பரிசோதனை செய்வது அவசியம் என இருந்தும் அது நடைமுறையில் இல்லை.
ஹெச்.ஐ.வி வைரஸை பொறுத்தமட்டில் பாதிப்பிருந்தும் ரத்தத்தில் தெரியாத காலம் (Window period) என உள்ளது. அது சாதாரண பரிசோதனை மேற்கொண்டால் மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை தெரியாமலே போகும். ஆனால் 4-ம் தலைமுறை பரிசோதனையை (Nucleic Acid Amplification) பயன்படுத்தினால் ஒரு வாரம் எனக் கணிசமாகக் குறைக்கலாம். இருந்தும் தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்தத் தொழில் நுட்பம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. காரணம் அதைத் தீர்மானிக்கும் மத்திய அரசின் நிறுவனம் (Central Drug Standards Control Oraganisation) 3-ம் தலைமுறை (ELISA) பரிசோதனை போதுமானது என முடிவெடுத்ததே. மக்கள் மீது அக்கறை இருந்தால் 4-ம் தலைமுறை பரிசோதனை தேவையென முடிவு எடுத்திருப்பார்கள். வெறும் பணச்செலவை காரணம் காட்டி (4-ம் தலைமுறை பரிசோதனை மேற்கொள்வதால் ஏறக்குறைய ரூ.1,000 அதிகம் செலவாகும்) மத்திய அரசு மறுப்பது எப்படிச் சரியாக இருக்கும்.  
கனடாவில் 1985-லிருந்தும் இங்கிலாந்தில் 2005-லிருந்தும் அமெரிக்காவில் 2008-லிருந்தும் ரத்தம் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படுவது இல்லவேயில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சேத்தன்கோத்தாரி என்பவர் 2016-ல் பெற்ற பதிலில் இந்தியாவில் 2,234 பேருக்கு ரத்தம் செலுத்தியதன் மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தேசிய எய்ட்ஸ் தடுப்பு நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் ரத்த கொடையாளர்களில் 0.2 சதவிகிதம் ஹெச்.ஐ.வி தொற்று உள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2007-லிருந்து பிப்ரவரி-2018 வரை 1,134 பேர் ரத்த தானத்தின் மூலம் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதிகாரபூர்வமான தகவல்.
விஜயபாஸ்கர்
சாத்தூர் சம்பவம்தான் ஒரே நிகழ்வு எனக் கொள்ள முடியாது. இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வர முக்கிய காரணம் பாதிக்கப்பட்ட நபர் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அவரது ரத்தப் பரிசோதனையில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக அவர் அளித்த ரத்தம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்ற அக்கறையில் அவரே சாத்தூர் மருத்துவமனைக்குத் தகவல் அளித்ததால் பெரும் பத்திரிகை செய்தியாகிவிட்டது. இல்லையேல் ஒரு வேளை இது வெளி உலகத்துக்கு வராமலே இருந்திருக்கலாம்.
மேலும், ஜேகப்ஜான் என்பவர் 1987-ம் ஆண்டு வேலூரில் ரத்தம் ஏற்றியதன் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதைப் பதிவு செய்துள்ளார். அவரே 4-ம் தலைமுறை ELISA பரிசோதனை செய்வதன் மூலம் P 24 ஆன்டிஜன் இருப்பதை அறிந்து வின்டோ பிரியெட் ஒரு வாரம் எனக் கணிசமாகக் குறையும் என்பதைச் சுட்டிக்காட்டியதை அரசு ஏற்றுக்கொண்டும் இன்று வரை அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது எப்படிச் சரியாகும். 2009-ம் ஆண்டு செய்த ஆய்வில் ரத்த தானத்தின் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படுவது 1 சதவிகிதம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் செய்த ஆய்வில் ரத்தம் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவது 1.7 சதவிகிதம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு ரத்த வங்கிகளில் 4-ம் தலைமுறை ELISA பரிசோதனை செய்துவருவது தமிழகத்துக்குப் பாடமாக இருக்க வேண்டாமா. தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மையம் மும்பையில் ரத்த தானத்தின் பாதிப்புகளைச் சொல்லாமல் ரத்தம் ஏற்றி ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதால் 20 வருடங்களுக்கு முன்னர் ரூ 12,000 அபராதம் விதித்துள்ளது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறை போதிய நிதி ஒதுக்கினால் மட்டுமே சீர்கேடுகளைக் களைய முடியும் என இருக்கையில் தமிழகமோ 0.8% GDP மட்டுமே நிதி ஒதுக்குவது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொருளாதாரம் இல்லையெனக் கைவிரிப்பது எப்படிச் சரியாகும். ஒரு மாநில அரசு சுகாதாரத்துறையைச் சரியாக வழிநடத்த வேண்டுமெனில் 8 சதவிகிதம் GDP ஒதுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் சுஜாதா ராவ் சுட்டிக் காட்டியதை அரசு பின்பற்ற மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது. மேலும் உடனடியாக 4-ம் தலைமுறை  ELISA பரிசோதனையை அனைத்து ரத்த வங்கிகளிலும் பின்பற்ற உடனடி நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்

கருத்துகள் இல்லை: