வியாழன், 27 டிசம்பர், 2018

அதிமுக அமைச்சர்களை மிரட்டிய நிர்மலா சீதாராமன்

மின்னம்பலம் : ”டெல்லியில் கஜா புயல் நிவாரண
நிதி கேட்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் சந்தித்த அதே தருணத்தில்தான், சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னையில் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்திருக்கிறார்.
டெல்லியில் நடந்த சந்திப்பின் போது, நிதி தொடர்பான பேச்சுக்குப் பிறகு அரசியலும் பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். ‘அதிமுக அரசை எப்போதும் அரவணைத்துப் போகணும் என்றுதான் நாங்க நினைக்கிறோம். ஆனால், உங்களுக்குதான் அந்த எண்ணம் எப்பவும் இல்லை. பல இடங்களில் எங்களைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வெச்சுட்டே இருக்கீங்க... இது உங்க ஆட்சிக்கு நல்லது இல்லை. உங்களுக்கு இப்பவும் எந்த சிக்கலாக இருந்தாலும் எங்ககிட்டதான் ஓடி வர்றீங்க. அது ஆட்சியில் பிரச்னையாக இருந்தாலும் சரி... கட்சியில் பிரச்னையாக இருந்தாலும் எங்ககிட்டதான் வறீங்க. ஆனால், வெளியே பேசும்போது பிஜேபியை பற்றி விமர்சனம் செய்யுறீங்க.
இதையெல்லாம் பிரதமர் ரசிக்கவில்லை. தமிழ்நாட்டில் எதுவாக இருந்தாலும் எங்களைத்தான் கூப்பிட்டுக் கேட்கிறாரு. பார்த்து நடந்துக்கோங்க...’ என்று எச்சரிக்கும் தொனியில்தான் பேசியிருக்கிறார் நிர்மலா.

அதே நேரத்தில் சென்னையில் முதல்வரைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணனும், கிட்டத்தட்ட அதே ரீதியில்தான் சில விஷயங்களைச் சொன்னதாக சொல்கிறார்கள். அத்துடன் பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையில் இருக்கும் மோதல் குறித்து சமரசம் செய்யும் விதத்திலும் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார் பொன்னார். ‘இப்படி நீங்க பண்றதுக்காகவா நாங்க கஷ்டப்பட்டு அவரை உங்களோடு கொண்டு வந்து சேர்த்து வெச்சோம்?’ என்று காட்டமாகவும் பொன்னார் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதிமுக அரசுக்கு பிஜேபி தரப்பில் இருந்து கடுமையான நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்திருப்பதே கூட்டணி விஷயத்தில் அவர்கள் எதுவும் மறுப்பு சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்று முடிந்தது

கருத்துகள் இல்லை: