செவ்வாய், 25 டிசம்பர், 2018

தை 1-ம் தேதி அதிமுக - அமமுக இணைப்பா..?’ 20 தொகுதி இடைத்தேர்தல் காய்ச்சல் ..

NDTV : இருபது தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரிசைக்கட்டி நிர்பதால், தமிழகத்தில் அரசியல் காய் நகர்த்தல்கள் படு
வேகமாக நடந்து வருகின்றன. இருபது தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரிசைக்கட்டி நிர்பதால், தமிழகத்தில் அரசியல் காய் நகர்த்தல்கள் படு வேகமாக நடந்து வருகின்றன.
‘ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு திரியை கொளுத்திப் போட்டால், இன்னொரு பக்கம் ஒரு குடையின் கீழ் ஒன்றிணையும் எதிர்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி, ‘சுயநலக் கூட்டணி' என்கிறார்.
விசிக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைப்பது குறித்து மும்முரமாக ஆலோசித்து வரும் நிலையில், ‘வரும் தை 1 ஆம் தேதி அதிமுக-வுடன் அமமுக இணையப் போகிறது' என்றத் தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தகவலுக்கு உறுதி சேர்ப்பது போலத்தான் அமமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ‘அதிமுக-வும் அமமுக-வும் பிரிந்திருந்தால் அது காங்கிரஸ்-திமுக கட்சிகள் வெற்றி பெற வழியாக அமைந்துவிடும். எனவே, இருவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதற்கான காலக்கட்டம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல முக்கிய அதிமுக புள்ளிகள், ‘அண்ணா திமுக-விலிருந்து பிரிந்து சென்ற யாராக இருந்தாலும் மீண்டும், இயக்கத்தில் வந்து சேரலாம். இது குறித்து முதல்வரும், துணை முதல்வருமே வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளனர். என்னவானாலும், சசிகலாவையும் டிடிவி தினகரனையும் மீண்டும் அதிமுக-வில் சேர்க்கமாட்டோம்' என்று கட்டு அண்டு ரைட்டாக பதில் கருத்து கூறி வருகின்றனர்.
அமமுக-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் சமீபத்தில் திமுக-வில் ஐக்கியமானார். அவரின் விலகலும் அமமுக-வை பலவீனப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இனியும் கட்சியிலிருந்து ஒருவர் விலகி எதிர் முகாமான திமுக-வில் சேர்ந்துவிடக் கூடாது என்பதால், அதிமுக- அமமுக இணைப்பு பற்றி திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தினகரனுக்கு மிகவும் நெருக்கமான அமமுக நிர்வாகியிடம் பேசினோம், “அமமுக-வும் அதிமுக-வும் இணையப் போவதாக வரும் தகவல்கள் 100 சதவிகிதம் பொய். நாங்கள் அவர்களுடன் சேர்வதற்கு வைக்கும் முதல் நிபந்தனை முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்பதுதான். அதேபோல 10, 12 அமைச்சர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதை அவர்கள் ஏற்பார்களா..?
அவர்கள் அதை ஏற்க வாய்ப்பேயில்லை” என்று சொன்னவர் அடுத்தடுத்து வரும் தேர்தல்கள் குறித்து ஆரம்பித்தார்,
“தற்போது இணைப்பு குறித்து வரும் தகவல்கள் அனைத்துமே தேர்தல் நெருங்குவதால்தான். நாடாளுமன்றத் தேர்தலோ, இடைத் தேர்தலோ, அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை. ஒன்று நாங்கள் அல்லது திமுக. நாங்கள் தோற்றாலும் பரவாயில்லை. அதிமுக ஒரு சீட்டில் கூட ஜெயித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கொதித்தார்.
இதே விஷயம் குறித்து அதிமுக-வின் தலைமைக்கு நெருக்கமான முக்கியப் புள்ளியிடம் கேட்டோம். “அமமுக-விலிருந்து விலகி, அதிமுக-வுடன் சேர நிறைய பேர் விரும்புகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், அவர்கள் மொத்தமாக வரப் போகிறார்கள் என்பதில் உண்மை இல்லை. கண்டிப்பாக தினகரனையும், சசிகலாவையும் மீண்டும் அதிமுக-வில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணம் அறவே இல்லை” என்று மட்டும் தகவல் கூறி முடித்துக் கொண்டார்.

COMMENT
தேர்தல் வரும் வரை இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையும் அடங்கப் போவதில்லை

கருத்துகள் இல்லை: