ஞாயிறு, 6 நவம்பர், 2016

அதிமுக எம் எல் ஏக்களா? வேண்டாம் .. ஸ்டாலினை தடுத்த கலைஞர்.. 40 எம் எல் ஏக்கள்? நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல?

சென்னை: ஜெயலலிதாவின் உடல்நலத்தில் முன்னேற்றமிருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டியும் அதிமுக பிரமுகர்களும் சொல்லி வந்தாலும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் அந்த நம்பிக்கை முழுமையாக வரவில்லை. அவர்களிடம் நாம் பேசும்போது, ஜெயலலிதாவை கண்ணால் பார்த்தால் மட்டுமே எங்களின் சந்தேகம் விலகும் என்கிறார்கள். இதற்கிடையே, தமிழக அரசின் அடுத்த பொது பட்ஜெட் திமுகதான் போடப்போகிறது என்கிற சங்கதி அறிவாலய வட்டாரங்களில் சுழன்றடிக்கிறது.  எதன் அடிப்படையில் இந்த பேச்சு உலாவுகிறது என திமுகவின் மேலிடத்திற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ஜெயலலிதா வீடு திரும்பினாலும் அவர் முன்பு மாதிரி ஆட்சியிலும் கட்சியிலும் ஆளுமை செய்வது கடினம் என்கிற பேச்சு, அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பரவலாக இருக்கிறது. அதற்கேற்ப, ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே இருப்பதும் உடல் நலம் குறித்த சந்தேகங்கள் வலுத்து வருவதும் தான் காரணங்களாக அவர்கள் சொல்கின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஆக்ரமித்திருக்கும் இந்த ஊசாலாட்டத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலினை சுற்றியுள்ளவர்கள் அதிமுக கூடாரத்தில் காய்களை நகர்த்துகிறார்கள். குறிப்பாக, சபரீசன் தரப்பு நகர்த்துகிறது. ஸ்டாலினிடம் அவர்கள், 31 எம்.எல்.ஏ.க்கள் நமக்கு சாதகமான மூடிலிருக்கிறார்கள். தொடர்ந்து முயன்றால் இந்த எண்ணிக்கைக் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளனர். மருத்துவமனையிலிருக்கும் ஜெயலலிதா, வீடு திரும்பாமல் இப்போது போலவே மருத்துவமனையில் இன்னும் சில மாதங்கள் இருந்தாலோ அல்லது வீடு திரும்பிய நிலையில் தொண்டர்களை அவர் சந்திக்காமல் முடங்கிப்போனாலோ எம்.எல்.ஏ.க்களை மேலும் வளைப்பது எளிதாகிவிடும். அதனால் அடுத்த பட்ஜெட்டை திமுக போடுவதற்கு வாய்ப்பு வருகிறது என்பதாக தூபம் போட்டுள்ளனர். இதனை பெரிதாக நம்புகிறார் ஸ்டாலின். அவரைப் பொறுத்த வரை, திமுகவால் ஆட்சி அமைக்க முடியும் என்கிற சூழல் உருவானால் திமுக பக்கம் அதிமுகவின் 40 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வந்துவிட முடியும் என்று நினைக்கிறார். அதனை மையப்படுத்தி ஸ்டாலினின் யோசனையை அவருக்கு நெருக்கமானவர்கள் கருணாநிதியிடம் அண்மையில் சொல்லியிருக்கிறார்கள். கருணாநிதியோ, அதிமுகவை உடைத்து ஆட்சி அமைக்கலாம்ங்கிற எண்ணம் வேணாம்யா. எனக்கு அதில விருப்பம் கிடையாது. மக்கள் கிட்டயும் நல்லப்பேரு கிடைக்காது. வேணும்னா திமுகவை ஆதரிக்கலாம்னு நினைக்கிற எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வெச்சுட்டு அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி ஜெயித்து ஆட்சியை பிடிக்கச்சொல்லு. அதுதான் திமுகவுக்கு நல்லதுன்னு சொல்லி ஸ்டாலின் தரப்பினர் கூறிய யோசனையை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டார். அப்பல்லோவில் சசிகலாவை ராஜாத்தியம்மாள் சந்திச்சப்ப அதிமுகவை உடைக்க நடக்கும் சதியை பத்தி சொல்லியிருக்கிறார் சசிகலா. அதை கருணாநிதியிடம் தெரிவித்தார் ராஜாத்தியம்மாள். அப்போ, அந்த நிலையெல்லாம் வாராதுன்னு ராஜாத்தியிடம் சொல்லிவிட்டார் கருணாநிதி. அதை அப்பலோவுக்கும் பாஸ் செய்தார் ராஜாத்தியம்மாள். அதே நிலைப்பாட்டைத்தான் ஸ்டாலின் தரப்பினர் தம்மிடம் பேசும்போது, மேற்கண்டவாறு சொன்னார் கருணாநிதி. அதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஈர்க்கும் முயற்சி தற்காலிகமாக ஸ்டாலின் தரப்பு நிறுத்தி வைத்திருக்கிறதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன
 tamiloneindia.com

கருத்துகள் இல்லை: