வெறும்
13 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடக் கூறிய உச்சநீதி மன்றத்தின்
உத்தரவைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து, கன்னட இன வெறியர்கள் பெங்களூரு
நடத்திய வன்முறை வெறியாட்டங்கள்
காவிரி நீரை நம்பித்தான் தமிழகத்தில் 24.5 இலட்சம்
ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி நீர்தான் தமிழகத்தின் 19
மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரமாக உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 15
இலட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் சம்பா பயிரை நம்பி 40 இலட்சம் விவசாயிகள்
உள்ளனர். ஆனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை
சாகுபடியே நடைபெறவில்லை. சம்பா பயிருக்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது என்ற
நிலை இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கிறது.
வெறும்
13 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடக் கூறிய உச்சநீதி மன்றத்தின்
உத்தரவைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து, கன்னட இன வெறியர்கள் பெங்களூரு
நடத்திய வன்முறை வெறியாட்டங்கள்
கர்நாடகாவில் ஜூன் 1 தொடங்கி ஆகஸ்டு 17 முடிய 448 மி.மீ. அளவிற்கு மழை பொழிந்திருக்கிறது. இது சராசரி மழை பொழிவைவிட 10 மி.மீ.தான் குறைவு. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளிலும் 57 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக அம்மாநில அரசு அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வாதிட்ட ஃபாலி நாரிமன் கர்நாடக அணைகளில் 80 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக விசாரணையின் போது தெரிவித்திருக்கிறார். இவையன்றி, கர்நாடக அரசு அமைத்துள்ள காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கபினி அணைக்கு மேற்கே 20 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரி இருப்பதாகக் குறிப்பிடுகிறார், அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
“நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு இன்னும் தரவேண்டியிருக்கும் நீரின் அளவு என்ன என்பதை தீர்மானிக்க வேண்டுமானால், கடந்த 29 ஆண்டுகளில் பெய்த மழை குறித்த விவரம், காவிரியிலிருந்து நான்கு மாநிலங்களும் பெற்ற நீரின் விவரம், அதனைப் பயன்படுத்திய விவரம், முறைகேடாக நீரை எடுத்தது குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றையெல்லாம் பரிசீலித்துதான் முடிவு செய்ய முடியும். அதற்கு நேரம் போதாது. அத்துடன் திறந்து விட்டதாக கர்நாடகம் சொல்கின்ற நீரின் அளவும், தங்களுக்கு வந்து சேர்ந்ததாக தமிழகம் சொல்கின்ற நீரின் அளவும் வேறுபடுகின்றன. எனவே இவை குறித்த தரவுகளை திரட்டுவதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டும். நீர்வரத்தின் அடிப்படையில்தான் நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, காவிரிக்கான நீர் வரத்தின் அளவு என்ன என்பதைத் திரட்டுவதற்கான ஒரு வலைப்பின்னலையும் உருவாக்க வேண்டியிருக்கிறது.”
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மை எரித்து, தஞ்சாவூர் நகரில் நடந்த போராட்டம்
சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த முடியாது என்பதைக் கன்னட வெறியர்கள், தமிழகப் பேருந்துகளை, சரக்குந்துகளைக் கொளுத்துவதன் வாயிலாகத் தெரிவிக்கிறார்கள். அடுக்கடுக்காக வழக்குகளைப் போட்டு இழுத்தடிப்பதன் மூலம் கர்நாடக அரசும் இதைத்தான் சொல்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை மாநில அரசு அமலாக்க மறுக்கும்போது, அதனை அமல்படுத்த வைக்க வேண்டிய மோடி அரசு, தனது மவுனத்தின் மூலம் கூறவரும் கருத்தும் இதுதான்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைக்கும், காவிரிப் பிரச்சினையில் மைய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. காங்கிரசு பா.ஜ.க., கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிக்கின்ற வாய்ப்பு கர்நாடகத்தில் இருப்பதும், தமிழகத்தில் இல்லாதிருப்பதும்தான் தமிழகத்துக்கு எதிரான இந்த ஓரவஞ்சனைக்கு காரணம் என்று இதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. இது மிகவும் மேலோட்டமானது. இந்த தேசியக் கட்சிகள் தமிழகத்தில் செல்வாக்கு பெற இயலாமலிருப்பதற்குக் காரணமான, “ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு” உள்ளிட்ட திராவிட இயக்கம் சார்ந்த கருத்தியல்கள் மீது இவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புதான், இவர்களுடைய தமிழ் வெறுப்புக்கு மிக முக்கியமான காரணம். இத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.
கூடங்குளம் அணு உலை தமிழகத்துக்கு விளைவிக்கக் கூடிய தீங்குக்கு எதிராக மக்கள் போராடிய போது, அந்த எதிர்ப்பை மீறி அணுஉலையைத் தமிழகத்தின் மீது திணித்தது உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசின் எதிர்ப்பை மீறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட மறுக்கும் உச்ச நீதிமன்றம், கெயில் வழக்கில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதற்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறது.
மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை முடியுமுன்பே, அத்தேர்வை எதிர்த்து வந்த தமிழகத்தின் மீது, அதனைத் திணித்து உத்தரவிடுகிறது. தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அதிஉயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்ததை ரத்து செய்கிறது. ஆனால், காவிரிப் பிரச்சினையில் தனது தீர்ப்பைக் கடுகளவும் மதிக்காமல் நடந்து கொள்ளும் கர்நாடக அரசுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அறிவுரை கூறுகிறது உச்ச நீதிமன்றம்.
இவற்றுக்கும் மேலாக, மேகேதாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயலுவதைத் தடை செய்யக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 2016, ஜூலை 19 தொடங்கி தொடர்ச்சியாக விசாரிக்கப் போவதாக 2015, மார்ச் 28 அன்று அறிவித்த உச்சநீதி மன்றம், தற்பொழுது அந்த விசாரணையை அக்.12-க்குத் தள்ளிவைத்து விட்டதாக அறிவிக்கிறது. இந்த இழுத்தடிப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு 5,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக ஆணவத்தோடு அறிவிக்கிறார், கர்நாடக முதல்வர் சித்தராமையா.
தேசிய ஒருமைப்பாடு என்பது நிபந்தனைக்குட்பட்ட ஒரு அரசியல் ஒப்பந்தம். அது ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பர நலனைப் பேணுதல் என்பதுதான் அதனின் அச்சாணி. காவிரி, பாலாறு, சிறுவாணி, முல்லைப் பெரியாறு ஆகிய ஆற்றுநீர் உரிமைகளில் தொடங்கி, கூடங்குளம், நீட் தேர்வு, கெயில் வரையிலான அனைத்திலும் அந்த அச்சாணியை இந்திய ஆளும் வர்க்கமே முறித்துவிட்டது. எனவே, இந்த ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்கு தமிழகம் அடிபணிய வேண்டிய அவசியமில்லை.
மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் தமிழக்த்தின் மீது செலுத்தி வரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்கு நாம் கட்டுப்பட மறுப்பதன் மூலம்தான் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும். வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தியின் போது நடைபெறும் உறியடி விழாவில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் உறிகளைத் தொங்க விடக்கூடாது என்று பாதுகாப்புக் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை மதிக்க முடியது எனறு பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் இந்த ஆண்டு விழா நடத்தப்பட்டது. தமிழகத்தின் நிலை என்ன? வீர விளையாட்டு என்று சல்லிக்கட்டுக்காக மீசை முறுக்கும் வீரர்களுக்குக்கூட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறுகின்ற துணிவு இல்லை.
உச்சநீதி மன்ற உத்தரவை மீறி நடப்பதற்குத் தமிழக ஓட்டுக்கட்சிகள் தயங்கலாம். ஆனால், தமிழக மக்கள் அவைகளின் வழியொற்றி முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியைத் திணிப்பதில் தீவிரமாக இருந்த வட இந்திய அரசியல்வாதிகளிடம், இந்தி இந்தியா வேண்டுமா, அல்லது முழு இந்தியா வேண்டுமா என்ற கேள்வியை இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுப்பிய பின்னர்தான் அவர்களது திமிர் ஒடுங்கியது.
ஒருதலைப்பட்சமான ஒருமைப்பாட்டுக்குக் கட்டுப்பட மறுப்போம் என்ற முழக்கம்தான் பிழைப்புவாதிகள் முதல் இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகள் வரையிலான அனைவரையும் அச்சம் கொள்ள வைக்கும்.
– அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக