செவ்வாய், 1 மார்ச், 2016

விகடன்: கார்த்தி சிதம்பரம் சொத்து குவித்தாரா? பயோனியர் ஆங்கில நாளிதழ் பொய் சொல்கிறதா?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிங்கப்பூர், துபாய், லண்டன் நகரங்கள் உள்பட  உலகின்14 இடங்களில் முதலீடு செய்துள்ளதாக பயோனீர் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ள பரபரப்பான கட்டுரையை அடிப்படையாக கொண்டு அதிமுக இன்று நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பியதை தொடர்ந்து, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் மீண்டும் வில்லங்கத்தை கிளப்பி உள்ளது.
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் இணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலங்களில் நடத்திய கூட்டு சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இருந்து இந்த செய்தியை பயோனீர் பிரசுரித்துள்ளது.
பரபரப்பை கிளப்பி உள்ள பயோனீர் பத்திரிகையின் மொழியாக்க கட்டுரை இங்கே...  கார்த்தி சுத்தமா ஜெயலலிதா சுத்தமா மோடி சுத்தமா என்பதை விட தமிழக தேர்தல் நேரத்தில் பாஜகவின் ஊதுகுழல் பத்திரிக்கை பயோனியர் இதை வெளியிட்டு இருப்பதுதான் சந்தேகத்தை வரவழைக்கிறது ...காத்திருந்ததுபோல அதிமுக இதையிட்டு பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்பி அதை முடக்கியது ஏன்?


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், பண பரிவர்த்தனைக்கு உதவியாக இருந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரடேஜிக் கன்சல்டிங் நிறுவனத்தில் அண்மையில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் இருந்து  இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் கன்சல்டிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில்,  கார்த்தி சிதம்பரம் பல வெளி நாடுகளில்,  முக்கியமாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் சிங்கப்பூர், துபாய், தென்ஆப்ரிக்கா, லண்டன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ் என உலகின் 14 இடங்களில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பான 2ஜி வழக்கை விசாரித்து வரும் தனி நீதிமன்றம்,  சிங்கப்பூர் அரசுக்கு கார்த்தியின் சொத்து மதிப்புகள் குறித்து விரிவான அறிக்கை  தரும்படி ஏற்கனவே கடிதம் எழுதிக்  கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2014-ம் ஆண்டு  வரை ப.சிதம்பரம்,  மத்தியில் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த போது கார்த்தியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம்,  88 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  இதே சிங்கப்பூர் நிறுவனம் கேம்ப்ரிட்ஜை சேர்ந்த ஏர்டிவியா  நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது. லண்டனை சேர்ந்த ஓபன்ஹெய்மர் நிறுவனத்துடனும் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் பண பரிவர்த்தனை தொடர்பு வைத்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள லங்கா ஃபார்ச்சூன் ஹோட்டலின் பெரும்பகுதி பங்குகளையும் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. தி வாட்டர்ஃப்ரோன்ட், வெலிகாமா பே ரிசோர்ட், எமரால்ட் பே ஹோட்டல்களும் இந்த நிறுவனத்துக்குத்தான் சொந்தம். இந்த ஹோட்டல்களில் முதலீடு செய்யப்பட்டது குறித்தும், வருமான வரி மோசடியில்  ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கிடைத்திருகிறதாம். டிசம்பர் மாதத்தில் நடந்த இந்த ரெய்டில், இலங்கையை சேர்ந்த யூனியன் டெவலப்மென்ட் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி மூலமே முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அடுத்து தென்ஆப்ரிக்காவில் உள்ள வினியார்ட்ஸ் என்ற இடத்தில் 3 பண்ணைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியுள்ளது.  இந்த பண்ணை வீடுகளை வாங்க சிங்கப்பூர் நிறுவனம்,  துபாய் வழியாக பணத்தை செலுத்தியுள்ளது. இந்த பண்ணைகள் கேப் ஆர்ச்சிட்ஸ், வினியார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், சேன்ட்விலிட் என்டர்பிரைசஸ் என்ற பெயரில்  செயல்பட்டு வருகின்றன. இந்த சிங்கப்பூர் நிறுவனம்,  தென்ஆப்ரிக்காவில் செயல்படும் நிகோல்ஸ் ஸ்டெயின் அண்டு அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்தும் பணபரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறது.

துபாயை சேர்ந்த டெசர்ட் ட்யூன்ஸ் பிராபர்ட்டிஸ் நிறுவனம் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கிடையே 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் அளவிற்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது.   பேர்ல் துபாய்  என்ற மற்றொரு துபாய் நிறுவனமும் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துடன் பண பரிவர்த்தனை தொடர்பு கொண்டுள்ளது.

அத்தோடு பிலிப்பைன்ஸ் நிறுவனங்களான எஸ்.எம். ஏரானா ஸ்போர்ட்ஸ் கார்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து,  சர்வதேச இந்தியன் பிரீமியர் லீக் டென்னிஸ் தொடரில் விளையாடி வரும் அணியை,  கார்த்தியின் சிங்கப்பூர்  நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.  கிரேவிட்டாஸ் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து,  கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் 'மணிலா மாவ்ரிக்ஸ்' என்ற டென்னிஸ் அணியையும் வாங்கியுள்து.

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனமான தி அட்வான்டேஜ், மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான ரியல் பேயாண்ட் நிறுவனத்துடன் பணபரிவர்த்தனை தொடர்பு கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு மலேசியாவில் 3 துணை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனம்,  மலேசியாவில் 16 இடங்களில் நிலங்களை வாங்கிப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து பிரிட்டிஷ் விர்ஜின் தீவுப் பகுதியில் சோமர்செட் என்ற இடத்தில்,  சோமர்செட் ஸ்டர்ரிட்ஜ் லிமிடெட் என்ற பெயரில், ஃபுல் இன்னாவேசன்ஸ் என்ற நிறுவனத்தில் 4 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனம் சுவிட்சர்லாந்தின் ஜீபன் டிரேடிங் நிறுவனத்துடன் பண பரிவர்த்தனை தொடர்பு கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற வங்கியான யு.பி.எஸ். வழியாகவே இந்த நிறுவனம் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் நடத்தியுள்ளது.

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான 'யூனிசன் குளோபர் இன்வெஸ்ட்மென்ட்' நிறுவனத்தில், 5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை முதலீடு செய்துள்ளது.  கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் மலேசியாவில் 1.9 மலேசிய ரிங்கிட்டுகள் மதிப்பிலான அடுக்கு மாடிக் குடியிருப்பை வாங்கியுள்ளது. இதன் பெயர் பெனிசூலா கபே. அத்துடன் மலேசியாவில் கஃபே காபி என்ற நிறுவனத்தில் முதலீட்டினை கொட்டியுள்ளது. மலேசியாவில்தான் சிவசங்கரனின்  ஏர்செல் நிறுவனத்தை கையகப்படுத்திய மேக்சிஸ் நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் 'அட்வான்டேஸ் எஸ்டேடஜிவா ஸ்போர்ட்டிவா 'என்ற துணை நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இது ஒரு டென்னிஸ் விளையாட்டு அகாடமி ஆகும். 4 ஏக்கர் பரப்பளவில் 7 டென்னிஸ் கோர்ட்டுகள் இதில் அமைந்துள்ளன. அத்துடன் பிரான்சை சேர்ந்த' பெம்ப்லான் ஆர்கனைஷேஸன்' மற்றும் கிரீஸ் தலைநகர் ஏதென்சில் இயங்கி வரும்  'பிசானி ஜான் ஸ்கெல்லர்ஸ்' நிறுவனத்துடன் பண பரிவர்த்தனையை அது மேற்கொண்டுள்ளது.

அதே வேளையில் சென்னையில் செயல்படும் கார்த்தியின்  அட்வான்டேஜ் நிறுவனம், ஏர்செல் டெலிவென்ச்சர்ஸ், டிசிபி கிளையன்ட், டியாஜியோ ஸ்காட்லாந்து லிமிடெட், கத்ரா குழுமம், இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு மையம், யூனிஃபை வெல்த் மேனேஜ்மென்ட், வி.எஸ்.டி டில்லர் டிராக்டர்ஸ், கார்ல்ட்ன் டிரேடிங் கம்பெனி, கிளாரிஸ் லைஃப் சயின்சஸ், ஐ.டி.சி சென்டர், பெஸ்ட் லேண்ட் ரியாலிட்டி லிமிடெட், எஸ்ஸார் ஸ்டீல் லிமிடெட், கோகுல்ஸ் பில்டர்ஸ் அண்டு எஸ்டேட்ஸ், எஸ். குமார்ஸ், ஐ.என்.எஸ் மீடியா,ரிஃப்ளெக்சன்ஸ், தியாகராஜர் மில்ஸ், சாக் சஃப்ட், ஈ.எல். ஃபோர்ஜ் லிமிடெட் போன்ற நிறுவனங்களுடன் பணபரிவர்த்தனை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம்,  ஏர்செல் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னரே இவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும்,  பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்  வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இது குறித்து மேக்சிஸ் ஏர்செல் வழக்கினை  கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்துக்கும் சீலிடப்பட்ட உறையில் வைத்து விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் சி.பி.ஐ.க்கும் சீலிடப்பட்ட கவரில் விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்.

மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்த காலத்தில்,   ஏர்செல் நிறுவனத்தை  வெளிநாட்டு நிறுவனம் வாங்க அனுமதியளித்ததும் முற்றிலும் சட்ட விரோதமானது என்று சீலிடப்பட்ட கவரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
கார்த்தி சிதம்பரம் மறுப்பு!
இதனிடையே பயோனீர் நாளிதழ் வெளியிட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், கடந்த காலங்களில் ஏற்கனவே தம்மால் மறுக்கப்பட்டவைதான் தாமும் , தனது நிறுவனங்களும் முற்றிலும் சட்டத்திட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருவதாகவும் கார்த்தி சிதம்பரம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள மறுப்பு செய்தியில் தெரிவித்துள்ளார்.விகடன்.com

கருத்துகள் இல்லை: