ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

மாயாவதி: ஸ்மிருதி இராணியின் மகிஷாசுரன் பேச்சு பழகுடிமக்களை ஆத்திரமூட்டுவதாகும்

புதுடில்லி,:பார்லிமென்ட் விவாதத்தின்போது, மகிசாசுரன் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியவற்றை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.,வுக்கு எதிராக பயன்படுத்த, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை குறித்து, ராஜ்யசபாவில், கடந்த மூன்று நாட்களாக நடந்த விவாதத்தின்போது, மாயாவதியும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர், கடுமையாக விவாதம் செய்தனர். 'ஐதராபாத் பல்கலை மாணவர் தலித் என்பதால்தான் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்கொலைக்கு துாண்டியுள்ளனர்' என, மாயாவதி கடுமையாக குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்து பேசும்போது, புராணக்
கதையில் வரும் மகிசாசுரனை, துர்க்கை கொன்ற கதையை விளக்கினார் ஸ்மிருதி இரானி. துர்க்கையை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். ஆனால், மகிசாசுரனுக்கு ஆதரவாக, மாணவர்கள் சிலர், 2004ல் நிகழ்ச்சி நடத்தியதாக, அப்போது வெளியிடப்பட்டதுண்டு பிரசுரங்களை காட்டி பேசினார்
ஸ்மிருதி.இந்தப் பிரச்னையை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தர பிரதேச தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான பிரசார கனையாக பயன்படுத்த, மாயாவதி யின் பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டுள்ளது.
மகிசாசுரனை, உத்தர பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள சில பழங்குடியின மக்கள் வணங்கி வருகின்றனர். தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக பா.ஜ., செயல்படுவதாக பிரசாரம் செய்யப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மார்ச், 15ம் தேதி, கட்சியின் நிறுவனர் கன்சிராமின் பிறந்த நாள்கொண்டாட்டத்தின்போதே, இதற்கு முன்னோட்டமாக, பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரம் தொடங்கும் என கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
'வெறும் வாயையே மெல்லும் மாயாவதி, அவல் கிடைத்தால் சும்மா இருப்பாரா' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்  தினமலர்.com

கருத்துகள் இல்லை: