வியாழன், 3 மார்ச், 2016

Texas பல்கலைக்கழகத்தில் இனி துப்பாக்கி தூக்கலாம் ! பூலோக சொர்கத்தின் கேவலம் பாரீர்!

us-allow-gun-in-college-1வினவு.com :அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இனி மாணவர்கள் புத்தகப் பைகளோடு துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு வரலாம். நீங்கள் அதிர்ச்சியடைந்தாலும் இது உண்மைதான். செனட் மசோதா 11-ன் படி 21 வயது பூர்த்தியடைந்து துப்பாக்கிக்குரிய லைசன்ஸ் பெற்ற மாணவர்கள் கைத்துப்பாக்கியோடு கல்லூரி வரலாம். இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்ட எட்டாவது மாநிலம் டெக்சாஸ்.  வரும் அகஸ்டு மாதம் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
பொதுவில் அமெரிக்கச் சட்டமானது ஆயுதம் வைத்துக் கொள்வதை அடிப்படை உரிமையாக அங்கீகரித்து உள்ளது.
us-allow-gun-in-college-3இருப்பினும் இச்சட்டம் அந்த உரிமையை கல்லூரி வரை கொண்டு வந்து அமெரிக்க சுதந்திரத்தின் ‘பொறுப்புணர்வை’ நிரூபித்திருக்கிறது.
பல்கலைகழக மாணவர்கள் கைத்துப்பாக்கியை மறைவாக வைத்து இருக்க வேண்டும், வெளியே தெரியும்படி காட்டக் கூடாது, வாகனங்களில் வைத்து இருக்கும் போது அதை பத்திரமாக பூட்டி வைத்து இருக்க வேண்டும், பொதுவில் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும் முதலான நிபந்தனைகளை வைத்து இச்சட்டம் துப்பாக்கி தூக்குவது கட்டுப்படுத்துவதாக சில அறிஞர்கள் போங்காட்டம் ஆடுகின்றனர்.
வில்லியம் மெக் ராவென், பின் லாடனை ஒழித்துக் கட்டிய அணியை வழி நடத்தியவர். கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்த அவருக்கு துப்பாக்கி மிகவும் பிடித்தமானது தான் என்றாலும் பல்கலைகழகத்தில் துப்பாக்கிகள் நடமாடுவதை ஏற்க முடியாது என்கிறார். என்ன இருந்தாலும் அடிக்கடி வந்து மோதும் தற்கொலைப் போராளிகளின் மண்ணில் வேலை பார்த்தவராயிற்றே!
அமெரிக்காவின் உள் நாட்டு ஆயுதம் மற்றும் வெடிபொருள் விற்பனைக்கான சந்தை மதிப்பு பல பில்லியன் டாலர்கள் என்றால் இது வெறுமனே ‘சுதந்திரத்தின்’ பிரச்சினையா, இலாபத்தின் நிபந்தனையா? சோப்பு சீப்பு கண்ணாடி தயாரிக்கும் நிறுவனங்களை போலவே அங்கே துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால் விற்று தானே ஆக வேண்டும்?
அமெரிக்க காங்கிரசின் புரவலராக இருக்கும் இந்நிறுவனங்களுக்கு  இத்தகைய துப்பாக்கிச் சட்டங்கள் நாடு முழுக்க சந்தையை விரிவுபடுத்தும் முன்னோட்டமாக இருக்கின்றன. கைத்துப்பாக்கியை மறைத்து கொண்டு வரலாம் என்று கூறுபவர்கள்தான் ஒரு கடிகாரத்தை டல்லாஸ் உயர்நிலை பள்ளிக்குக் கொண்டு வந்ததற்காக சிறுவனான அகமத் மகமதை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒரு முசுலீம் சிறுவன் கடிகாரம் கூட எடுத்து வர முடியாத நிலையில்தான் அமெரிக்கா சுதந்திரத்தின் சொர்க்கமென்று அளக்கிறார்கள்.
பல்கலைகழகத்தில் 21 வயது பூர்த்தியானவர்கள் மொத்த மாணவர்களில் 1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே என்பதால் துப்பாக்கி வாங்க தகுதி படைத்தோர் அதிகம் இல்லை என்று அரசுத் தரப்பு சப்பைக்கட்டு கட்டுகிறது. ஒரு துப்பாக்கியை வைத்து ஒருவரை மட்டுமா சுட முடியும்? அமெரிக்காவில் பொது இடங்களில் தனிநபர்கள் சுடும் சம்பவங்களில் பலர் இறந்து போகின்றனர். 5000-ம் பேர் படிக்கும் கல்லூரியில் ஐந்து பேர் துப்பாக்கியோடு சுடலாம் என்று முடிவெடுத்தாலே அதன் விளைவுகள் ஒரு சதவீதத்திலா இருக்கும்?
“இந்த பல்கலைகழகச் சூழல் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் மட்டுமேயானது என்றும் துப்பாக்கிக்கு அங்கு வேலையில்லை” என்று தனது சொந்த கருத்தைக் கூறியுள்ள அந்த பல்கலையின் தலைவர் கிரிகோரி பென்வேஸ் விரைவில் பல்கலைகழகத்தை விட்டு விலக போவதாகவும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு வழிகளில் போராடி வந்த நிலையிலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக பல்கலைகழகம் தெரிவித்து உள்ளது அவர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது துப்பாக்கிகளை பல்கலையில் அனுமதிக்கும் நடைமுறையானது, அங்கே பணிப் புரியும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை மிரட்டுவதற்கும், ஜனநாயக பூர்வமாக விவாதம் நடத்துவதற்கு தடையாக இருக்குமென்றும் இந்த பேராசிரியர்கள் தமது அச்சத்தை தெரிவித்து உள்ளனர்.
டாஸ்மாக் சாராயம் குடிப்பது உரிமையா, இல்லை அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளைக் கருத்தில் கொண்டு அதைத் தடுக்கப் போராடுவது உரிமையா என்று நாம் கேட்டால் குடிப்பது தவறு தான் ஆனால் அது அரசின் கொள்கை முடிவு அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று நீதிமன்றங்கள் கூறுவதை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.
அமெரிக்க கறுப்பின மக்களுக்கு எதிரான அடக்குமுறையும், துப்பாக்கி சூடும் அந்த மக்களின் தனி மனித சுந்ததிரத்தையும் உயிர் வாழும் உரிமைகளையும் பறிக்கப்பட்டிருப்பதும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரும்ப் இசுலாமிய மக்களை நாட்டிற்குள் வர விடாமல் தடுக்கப் போவதாய் பேசி இருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அமெரிக்கா வழங்கியிருக்கும் உரிமைகளின் யோக்கியதை என்ன என்பதை அறியலாம்.
ஜார்ஜ் புஷ் டெக்சாசின் கவர்னராக இருந்த போதுதான் அங்கே அதிகம் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போதைய துப்பாக்கி உரிமையை கல்லூரிக்கு விரித்திருக்கும் டெக்சாசைப் போன்றே ஏழு மாநிலங்களும் செய்திருக்கின்றன. அதில் ஒன்றான ஆர்கன் மாநிலத்தில் இருக்கும் பல்கலையில்தான் கடந்த வாரம் ஒரு துப்பாக்கி சூடு நடந்தது. எனினும் மக்களின் உயிரை விட முதலாளிகளின் இலாபம் முக்கியமானது என்பதே முதலாளித்துவத்தின் தனிநபர் உரிமை.

கருத்துகள் இல்லை: