திங்கள், 29 பிப்ரவரி, 2016

குட்டிகதையும் குட்டுக்களும் : கலைஞருக்கு அம்மா சொன்னதும் அம்மாவுக்கு ஏனையோர் சொல்வதும்


சென்னை:அ.தி.மு.க., மட்டுமே நாட்டை ஆளத் தகுதியான கட்சி என்பதை குறிக்கும் வகையில், தி.மு.க., தலைவரை, மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா கதை கூறி அசத்தினார்.
சென்னை, ஆர்.கே.நகர்., சட்டசபை தொகுதியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா கூறிய கதை:ஒரு ஊரில் அரசர் ஒருவர், தனக்கு அடுத்தபடியாக, நாட்டை ஆள தகுதியான நபரை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்கென்று, சில போட்டிகளை வைத்தார். அதில் பலர் கலந்து கொண்டனர்; கடைசியாக, இருவர் மட்டுமே மிஞ்சினர்.


அந்த இருவரிடமும், ஒரே அளவான தங்கக் கட்டிகளைக் கொடுத்து, 'இதை நீங்கள் செம்மையாக பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை, மூன்று மாதங்களுக்கு பின், அரசவையில் வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்' என்று அரசர் கூறினார்.

மூன்று மாதங்களுக்கு பின், அவர்கள் இருவரும், அரசவைக்கு வந்தனர். முதல் நபரை பார்த்து, 'தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினீர்கள்?' என்று அரசன் கேட்டார். தன் மகனையும், மகளையும், அவையின் முன் நிறுத்திய, அந்த நபர், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த நகைகளை, மகள் அணிந்து கொண்டிருப்பதையும்; அழகிய தங்கப் பேழை ஒன்றை மகன் வைத்திருந்ததையும், அரசனுக்கு காட்டினான்.

அவற்றை கண்டு வியந்த அவையினர், அரசர் கொடுத்த தங்கக் கட்டிகளை, இவர் நன்றாக பயன்படுத்தி உள்ளார். எனவே, நாட்டை நன்றாக ஆள்வார் என, கூறினர்.'உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும்தானா?' என அரசர் வினவினார். அதற்கு அந்த நபர், 'இல்லை இல்லை. என் மற்ற பிள்ளைகளை எல்லாம், நான் தலை முழுகிவிட்டேன்' என்று கூறினார்.

சரி. இரண்டாவது நபர் என்ன செய்துள்ளார் என பார்க்கலாம் என, அரசர் அவனை அழைத்தார். அந்த இரண்டாம் நபர், தன்னுடன், 100 பேரை அழைத்து வந்திருந்தார். 'தங்கக் கட்டியை என்ன செய்தீர்கள். இவர்கள் எல்லாம் யார்?' என்று அரசர் கேட்டார்.அதற்கு அந்த இரண்டாம் நபர், 'இவர்கள் எல்லாம், இந்த ஊரில் ஏழைகளாக இருந்தவர்கள். நீங்கள் கொடுத்த தங்கக் கட்டிகளை, இவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, வியாபாரம் செய்து, அவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர்' என்று கூறினார்.

இந்தக் கதையில் வரும் இரண்டாம் நபரைப் போல தான், அ.தி.மு.க., அரசு, மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: