வெள்ளி, 16 அக்டோபர், 2015

கோகுல்ராஜ் கொலைக்கு பயன்படுத்திய யுவராஜ் கார் பறிமுதல்

உடுக்க பள்ளிப்பாளையம், காட்டுப்பங்களாவில் இருந்து, கோகுல்ராஜ் கொலைக்கு பயன்படுத்திய, யுவராஜுக்கு சொந்தமான சபாரிகார் ஒன்றும்,  எம்.எம்.540 மகேந்திரா ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்தது.  இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டுகள் ராஜன், வேலன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே 22 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் தேடப்பட்ட தீரன் சின்னமலை இயக்க தலைவர் யுவராஜ் நாமக்கல்லில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 5 நாட்களாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அவர் கொலையை தான் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை.
நேற்று இரவு மீண்டும் அவரிடம் விசாரணை நடந்தது. இன்று அதிகாலை 2 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு இன்று அதிகாலை அவர் திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் மலைக் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.  கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் இடம் மற்றும் அவர் பிணமாக கிடந்த பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டி பாளையம் ரெயில்வே தண்டவாள பகுதி ஆகிய இடங்களுக்கும் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
நாளையுடன் யுவராஜிடம் விசாரணை முடிகிறது. இந்நிலையில் உடுக்க பள்ளிப்பாளையம், காட்டுப்பங்களாவில் இருந்து, கோகுல்ராஜ் கொலைக்கு பயன்படுத்திய, யுவராஜுக்கு சொந்தமான சபாரிகார் ஒன்றும்,  எம்.எம்.540 மகேந்திரா ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகவல் : காசி nakkheeran.in

கருத்துகள் இல்லை: