செவ்வாய், 13 அக்டோபர், 2015

நீதிமன்ற அவமதிப்பு....கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பாய்கிறது!

நீதிபதிகளை கவிஞர் வைரமுத்து விமர்சித்து பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12-ந் தேதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, சமூகத்தை நீதிமன்றம் கவனிப்பதைப்போல, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை. நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை ஆகிய 4 துறைகளும் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும் என நீதித்துறை குறித்து பேசினார்.

இந்த பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினிமா ஃபைனான்சியர் முகுன் சந்த் போத்ரா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நீதித்துறை, நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு எடுக்க இன்று விசாரணை நடைபெற்றது.
இதுபற்றி விசாரணை செய்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், இம்மனுவுடன் இணைத்துள்ள சி.டி.யை போட்டு பார்த்தோம். இம்மனு விசாரணைக்கு உகந்ததுதான். எனவே விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுகிறோம் என பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். dinamani.com

கருத்துகள் இல்லை: