ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை, பம்மலில் உள்ள பம்மல் நல்லதம்பியை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றார் மு.க.அழகிரி. உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ள நல்லதம்பியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி அவர்களது பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
குறிப்பாக, மீண்டும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி உருவாகும் சூழ்நிலை நிலவுவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் இப்போது தி.மு.க.வில் இல்லை என்றார் அழகிரி. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக நிச்சயமாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய கட்சி தொடங்கவேண்டும் என தொண்டர்கள் ஆர்வம் காட்டினாலும், ஆதரவாளர்களுடன் தீர ஆலோசித்துவிட்டு 2 மாதங்களுக்குப் பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். tamil.thehindu.com