செவ்வாய், 11 மார்ச், 2014

இந்தியாவுக்கு நேரில் வந்து நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆர்வம்

சென்னை:வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 11,844 தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் கேரளாவை சேர்ந்தவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்திய தேர்தல்களில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 2010ம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஓட்டளிக்க வகை செய்யப்பட்டது. ஆனால், தேர்தல் விதிமுறைப்படி வேறு எந்த நாட்டு குடியுரிமையும் பெறாத வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய தேர்தலில் ஓட்டளிக்கலாம்.


வெளிநாட்டில் வாழும் இந்தியரின் பாஸ்போர்ட்டில், இந்தியாவில் அவர் வசிக்கும் இடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள படிவத்தை போட்டோவுடன் பூர்த்தி செய்து தங்கள் தொகுதியில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அதன்பின், அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து கடிதம் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும்.

எனினும், தேர்தலின் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களுடைய சொந்த தொகுதிக்கு நேரில் வந்துதான் ஓட்டளிக்க வேண்டும். தபால் மூலமோ, ஆன்லைன் மூலமோ அல்லது தங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திலோ ஓட்டளிக்க முடியாது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமைப்பு கூறுகையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம், துணை தூதரகத்தில் ஓட்டளிக்க இந்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். அல்லது கடிதத்தில் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். 2.5 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் அனை வரும் ஓட்டளிக்க, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது சாத்தியமில்லை என்று கூறியுள்ளது.

எனினும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க கேரளாவை சேர்ந்த 11,488 பேர் பதிவு செய்துள்ளனர். அடுத்த நிலையில் பஞ்சாப் 138, தமிழகத்தில் 112 பேர் பதிவு செய்துள்ளனர். தவிர பிரான்சில் வசிக்கும் புதுச்சேரி மக்கள் 56 பேர், கோவாவை சேர்ந்த 27 பேர் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிரவாசி பந்து வெல்பேர் டிரஸ்ட் அமைப்பின் இயக்குநர் ஷம்சுதீன் கூறியுள்ளார்.

ஆனால், இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமாகவும், அதிக எம்.பி. தொகுதிகளை (80) கொண்டதாகவும் உள்ள உத்தர பிரதேசத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் யாரும் ஓட்டளிக்க பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - tamilmurasu.com

கருத்துகள் இல்லை: