திங்கள், 10 மார்ச், 2014

காங்கிரசுக்கு, ஐந்து 'சீட்' ! கதவு திறக்கும் தி.மு.க.?

தமிழகத்தில் காங்கிரசுக்கு, ஐந்து 'சீட்' ஒதுக்குவோம்; அதை ஏற்றுக் கொண்டால், கூட்டணி கதவு திறக்கும்' என, தி.மு.க., கூறிய யோசனையை, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.'கூட்டணியில் இனி மேல் எந்த கட்சிக்கும் இடமில்லை; கதவு அடைக்கப்பட்டு விட்டது' என, கூறி வந்த, தி.மு.க., தலைமை, இப்போது, 'கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தால் வரவேற்போம்' என, கூறி, கதவை திறந்து வைத்து உள்ளது.இது, அறிவாலய கதவை தொடர்ந்து தட்டிப் பார்த்து, திறக்காமல் போன தால், அலுத்து ஒதுங்கி நிற்கும் காங்கிரசுக்கு தெம்பை தந்துள்ளது.
அழகிரி அண்ணன் இனி சுறுசுறுப்பா வேலை பார்ப்பாரு. அவரு நினைச்சபடி காங்கிரஸ் வந்துடுச்சி. தேமுதிக போயிடுச்சி. இப்ப தான் எல்லோருடைய நாடகமும் புரியுது. அனேகமா அதிமுக = பாஜக கூட்டணி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. இங்க கம்யூனிஸ்டுக்கு கொடுக்குற ஐந்தை எனக்கு கொடு என்று சொல்லி காங்கிரஸ் வருகிறது. அந்தபக்கம், தேமுதிக தலைமையில் எல்லாம் நின்னு எட்டு தொகுதியில போட்டி போட்டு, செலவும் செஞ்சி, ஒண்ணுல கூட டெபாசிட் வாங்காம போறதுக்கு, கம்யூனிஸ்ட்டுக்கு கொடுக்கறதா இருந்த ரெண்டு சீட்டை எங்களுக்கு கொடு அம்மான்னு பாஜக அதிமுகவுடன் கூட்டு போட்டாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை.
 
உள்ளே அனுமதிக்க...இதை அடுத்து, மீண்டும், தி.மு.க.,வின் கதவுகளை தட்டத் துவங்கியுள்ளதாகவும், குறைந்த தொகுதிகளைக் கொடுத்து, காங்கிரசை உள்ளே அனுமதிக்க, தி.மு.க., முடிவு செய்து உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க., கூட்டணியில் இடம் கிடைக்காத விரக்தியில் இருந்த, தமிழக காங்கிரஸ் கட்சி, சொந்த காலில் நிற்கும் முயற்சியில், 40 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து, கட்சி மேலிடத்திற்கு பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. தற்போது காங்கிரசுக்கு, எட்டு லோக்சபா, எம்.பி.,க்கள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் போட்டியிடும் வகையில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தனித்துப் போட்டி என்ற நிலை ஏற்பட்டால், அதற்கேற்ப, 'பூத்' அளவில், காங்கிரஸ் தன் தொண்டர்களை ஒருங்கிணைக்க முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. சிறிய கட்சிகளுடன் மட்டும், தி.மு.க., அணி சேர்ந்த சூழ்நிலையை, தி.மு.க.,வின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் அழகிரியும் ஏற்கவில்லை என்பதை, அவர் பகிரங்கப்படுத்திஇருக்கிறார்.

வருவதாக இல்லை

இந்நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பேசியுள்ளார். அப்போது, ஐந்து தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால், காங்கிரசை சேர்க்கலாம் என, அவர்கூறியுள்ளார். 'கம்யூனிஸ்ட் கட்சிகள் வருவதாக தெரியவில்லை. அதனால், ஐந்து தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுக்கலாம்' என, அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.புதுச்சேரி தொகுதியையும் தர, தி.மு.க., முன்வரலாம். இந்த தகவலை, முஸ்லிம் கட்சித் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், காங்கிரஸ் மேலிடத் தலைவர், குலாம் நபி ஆசாத்திடம் தெரிவித்துள்ளனர். அவர், காங்கிரஸ் தலைமையிடம் பேசி, இது பற்றி, தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சைத் துவங்க அனுமதி வாங்கியிருப்பதாக, காங்கிரஸ் டில்லி வட்டாரம் தெரிவித்தது.அதற்கு முன், தமிழக காங்கிரசைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள், சிதம்பரம், வாசன், ஞானதேசிகன், இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டவர்களுடன், தமிழக காங்., வேட்பாளர் தேர்வுக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான, ஆசாத் இது பற்றி விவாதித்துள்ளார்.

பச்சைக்கொடி
முதலில் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை ஏற்று, தி.மு.க.,வுடன் பேச்சைத் துவங்கலாம் என, தமிழக தலைவர்கள் பச்சைக் கொடி காட்டி உள்ளனர். அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆசாத், இது பற்றி, தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் இன்று பேச உள்ளதாக, காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.இது, இரு கட்சிகளுக்கும் இருந்தகசப்பை குறைப்பதுடன் , லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை பழைய உறவை நீட்டிக்க உதவிடும் என்று கூறப்படுகிறது.

இன்று வெளியாகிறது தி.மு.க., பட்டியல்:
'தனித்துப் போட்டியிடுவோம்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத் நேற்று அறிவித்துள்ளதால், அக்கட்சி தி.மு.க., கூட்டணியில் இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு கூடுகிறது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு குழப்பத்தில் இருப்பதால், அக்கட்சியினர் கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும், இன்று மதியம், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: