சனி, 26 அக்டோபர், 2013

சமூக வலைதளங்களில் பிரசாரம்... தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள்

டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவோர் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்துக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக இப்போது மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. சமூக வலைதளங்களில் பிரசாரம்... தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தலைமை தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அதில் விக்கிபீடியா, ட்விட்டர், யூ டியூப், ஃபேஸ்புக் போன்றவற்றை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்துக்காக பயன்படுத்துவது குறித்த சில வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளை பற்றி குறிப்பிட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 26 ஏ படிவத்தின் அடிப்படையில் பூர்த்தி செய்யும் பத்திரத்தில் தங்களைப் பற்றிய மற்ற விபரங்களுடன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி, கைபேசி மற்றும் அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்கர் போன்ற சமூக வலைதளங்களின் பயனாளர் கணக்கு குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளது. தொலைக்காட்சி சேனல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் வெளியிடும் பிரசார விளம்பரங்கள் குறித்த விவரங்களையும் அவற்றுக்காக செலவழிக்கப்படும் தொகை குறித்த தெளிவான விவரங்களையும் தேர்தல் அதிகரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. சமூக வலைத்தளங்களில் செய்யும் பிரசாரம் குறித்து முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தவிர, இணைய தளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விஷயங்களின் உள்ளடக்கம் மீதான வழிமுறைகள் குறித்து தொலைத்தொடர்பு மற்றும் செய்தி தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: