திங்கள், 21 அக்டோபர், 2013

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் யோக்கியமானவர்களா ?

பிர்லா குழுமத்தின் சேர்மன் குமார மங்கலம் பிர்லா.
2005-ம் ஆண்டு ஒடிசாவில் ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு சாதகமாக நிலக்கரி வயல் ஒதுக்கீடு செய்ய சதித் திட்டம் தீட்டியதற்காக பிர்லா குழுமத்தின் சேர்மன் குமார மங்கலம் பிர்லா மீதும் அப்போதைய நிலக்கரித் துறை செயலர் பி சி பராக் மீதும் சென்ற வாரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டால், நிலக்கரித் துறை முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண ராவ், ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி துறை செயலராக இருந்த பிசி பராக்கைச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து இந்திய ஆட்சிப் பணித்துறை (ஐஏஎஸ்), இந்திய காவல் பணித் துறை (ஐபிஎஸ்), மற்றும் இந்திய வனப் பணித் துறை (ஐஎஃப்-ஒ-எஸ்) பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் சங்கங்கள் போர்க் கொடி தூக்கியிருக்கின்றன.
நேர்மையான அதிகாரிகள், “ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டார் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்ற தற்போதைய விதி திருத்தப்பட வேண்டும் என்று மத்திய ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஆர் பூஸ் ரெட்டி கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர், மத்திய ஊழியர் மற்றும் பயிற்சித் துறை செயலர், மத்திய அமைச்சரவை செயலர் தேவைப்பட்டால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை கூட சந்தித்து பேசப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஒரு நிறுவனத்திடம் பணத்தையோ இன்னபிற பரிசுப் பொருட்களையோ, சேவைகளையோ வாங்கிக் கொண்டு சாதகமாக நடப்பதை குற்றம் என்று வழக்கு பதிவு செய்யக்கூடாது என்கிறார்கள் இந்த ‘நேர்மை’யாளர்கள். மடியில் கனமிருந்தாலும் வழியில் பாதுகாப்பும் வேண்டும் என்கிறார்கள் இந்த ஊழல் சிகாமணிகள்.
சஞ்சய் பூஸ் ரெட்டி
ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் பூஸ் ரெட்டி
இந்த சங்க உறுப்பினர்கள் சனிக்கிழமை அன்று டெல்லியில் சந்தித்து இந்த விஷயம் குறித்து விவாதித்தனர். இத்தகைய பாதுகாப்பு இந்திய காவல் பணித் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
“தவறு செய்த அதிகாரிகளை தெருவில் விளக்கு கம்பத்தில் தூக்கு போடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நேர்மையான அதிகாரிகளை பலி கொடுக்காதீர்கள்” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டிருகிறார் பூஸ் ரெட்டி.
நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் 1.86 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று அறிக்கை அளித்த மத்திய தணிக்கை கணக்கு அலுவலகத்திலும் பராக், பூத் போன்ற அதிகாரிகள்தான் பணி புரிகின்றனர். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி, நேர்மையாள அதிகாரி என்று வாதாடி விடுபடுவதை விட்டு சங்கம் வைத்து போராடுகின்றர் அதிகாரிகள்.
“ஆமாமா, இந்த கோரிக்கையை நாங்களும் வலுவாக ஆதரிக்கிறோம்” என்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கச் செயலாளர் பங்கஜ் குமார் சிங் கூறியிருக்கிறார். “முதல் தகவல் அறிக்கை என்பது ஒரு ஆரம்பம் மட்டும்தான். அதன் பிறகு விசாரணை, சாட்சியங்கள் சேகரிப்பு, ஆய்வு இவற்றுக்குப் பிறகுதான் குற்றம் முடிவு செய்யப்படும். தவறுதலாக வழக்கில் சேர்க்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் போராடுவோம்” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். பங்கஜ் குமார் சிங் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை ஆய்வாளராக பணி புரிகிறார்.
இந்திய அரசு சேவையில் ஈடுபட்டுள்ள மூன்றாவது தூணான வனத் துறை அதிகாரிகள் சங்கமும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. “பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகளை நாங்கள் எப்போதுமே ஆதரிக்கிறோம்” என்று இச்சங்கத்தின் தலைவர் ஏ ஆர் சதா கூறியிருக்கிறார்.
நாடு முழுவதும் 4,737 ஐஏஎஸ் அதிகாரிகளும், 3,637 ஐபிஎஸ் அதிகாரிகளும், 2,700 இந்திய வனத்துறை அதிகாரிகளும் பணி புரிகின்றனர். இந்த அதிகாரிகளின் நிர்வாக மேற்பார்வையில்தான் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பதிவான தரவுகளின்படி 2001 முதல் 2010 வரை 14,231 கொட்டடி கொலைகள் நடந்துள்ளன. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 3 கொலைகள் நடந்திருக்கின்றன
2009-10 ஆண்டு முதல் 2013 பிப்ரவரி வரை 555 போலி மோதல் கொலைகள்  நடத்தப்பட்டுள்ளன.
2012-ம் ஆண்டின் இறுதியில் 2.5 லட்சம் விசாரணை கைதிகள் குற்றம் எதுவும் நிரூபணம் ஆகாமலேயே சிறையில் வாடுகின்றனர். இது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.
அப்பாவிகளை அநியாயமாக தண்டிக்கும் தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு அமைப்பைப் பற்றி இதுவரை பேசாத இந்த உயர் அதிகாரிகளின் சங்கங்கள் ‘நாளைக்கு நமக்கும் இப்படி ஒரு கதி நேருமோ’ என்ற பயம் வந்ததும், களத்தில் குதித்திருக்கின்றனர். ஜனநாயக திருவிழாவும், தொழில் துறை முனைவும் தளர்வில்லாமல் தொடர்ந்து நடப்பதற்கு இந்த படித்த மேதைகளின் உதவி இன்றியமையாதது என்பது அரசுக்கும் தெரியும், கார்ப்பரேட்டுகளுக்கும் தெரியும் என்ற நிலையில் அவர்கள் கேட்கும் விதி முறை மாற்றங்களை அரசு செய்து விடும் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை.
மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்களையும், மக்களின் சட்டைப் பையில் ஓட்டை போட்டுத் திருடும் கார்ப்பரேட்டுகளையும் இணைக்கும் திருப்பணியை செய்பவர்கள் செயலர் பதவிகளில் இருக்கும் ஆட்சிப் பணி அதிகாரிகள். தாசரி நாராயண ராவ் போன்ற துறைசார் அறிவு அல்லது நிர்வாக நெளிவு சுளிவு தெரியாத அரசியல்வாதிகள் அமைச்சர் ஆகும் போது எந்தெந்த வழிமுறைகளில், எப்படி எப்படி கமிஷன் அடிக்கலாம், அதற்குரிய ஆவணங்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்ன, தணிக்கையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்று பால பாடம் நடத்தி ஊழல்களின் வினையூக்கிகளாக செயல்படுவது அமைச்சரவை செயலர் முதலான பாபுக்கள்தான்.
பிசி பராக்
நிலக்கரி துறை செயலராக இருந்த பிசி பராக்
மேலும் அரசியல், மற்றும் தொழில் துறை எதிரிகளை போலி மோதல்கள் (என்கவுன்டர்) மூலமாக தீர்த்துக் கட்டுவதிலும், உள்ளூர் அரசியல் ரவுடிகளின் சேவையில் அப்பாவி மக்களை கொட்டடியில் அடைத்து கொலை செய்வதிலும் காவல் துறை முன்னணி வகிக்கிறது. அப்பாவி மக்களின் நேர்மை பற்றி எந்த கேள்வியும் இல்லாமல் தமது எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொடுக்கும் காவல் துறை அதிகாரிகள் இப்போது தமது முதுகை பாதுகாத்துக் கொள்வதற்காக கூக்குரல் எழுப்புகிறார்கள்.
அது போல வனப் பகுதிகளில் வாழும் அப்பாவி பழங்குடியினரை எந்த முதல் தகவல் அறிக்கையும், சாட்சியங்களும், வழக்கும் இல்லாமலேயே அடக்கி ஒடுக்கி வருவது வனத் துறை.
இந்தியாவை உண்மையாக ஆளும் இந்த அதிகார வர்க்கம்தான் அரசியல்வாதிகளின் பெயரில் இந்த நாட்டை அடகு வைக்கும் வேலையை செய்வதோடு மக்களையும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது.
சொகுசான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, தமது நிழலைக் கண்டே பயப்படும் பாசிஸ்டுகளின் உலகம்தான் இந்த அதிகாரிகளின் வாழ்க்கை. இவர்களைப் பார்த்து கோபம் கொள்வதோடு நில்லாமல், அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் அரசமைப்பையே தகர்த்தெறிவதுதான் நாட்டு மக்களுக்கும் நல்லது,  இந்த அதிகாரிகளுக்கும் நல்லது. vinavu.com

கருத்துகள் இல்லை: