சனி, 6 அக்டோபர், 2012

42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!

15ரூபாய்-சம்பளம்
 
உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான்.
பாரதிய ஜனதா ஆளும் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான். 2001 இல் கர்நாடக மாநில நிர்வாக ஆணையத்தை அணுகி தங்களது பணியை வரைமுறை செய்து நிரந்தரமாக்கிட கோரிய காரணத்துக்காக மாநில கல்வித்துறை இவர்களுக்கு கொடுத்து வந்த பதினைந்து ரூபாயையும் தற்போது நிறுத்தி விட்டது.
இவர்களுக்காக போராடி வரும் உடுப்பியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரவீந்திரநாத் ஷான்பாக்    க‌டந்த செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
மாநில நிர்வாக ஆணையம், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என அனைத்துமே இப்பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த போதும், தற்போது அவர்களுக்கு வயதாகி விட்டதால் பணிபுரியும் தகுதியில் இல்லை எனக் கூறி பணி வரைமுறை செய்ய மாநில அரசு மறுத்து விட்டது என்கிறார்.
2003 இல் மாநில நிர்வாக ஆணையம் 90 நாளில் பணியை நிரந்தரமாக்குங்கள் என மாநில அரசுக்கு உத்திரவிட்டது. 2004 இல் உயர்நீதி மன்றம் சம்பளத்தை உடனடியாக கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் அரசு நயா பைசா கூட அவர்களுக்கு தரவில்லை. எனினும் இது வரையில் இந்த இருவரும் இணைந்துதான் அப்பயிற்சி நிறுவனத்தில் உள்ள 21 கழிப்பறைகளைத் தினந்தோறும் சுத்தம் செய்து வருகின்றனர். 2005 இல் சிறப்பு விடுப்பு மூலம் சம்பளம் தருவதிலிருந்து விடுபட நினைத்து மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் மனுச் செய்தது. அங்கும் அப்பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்து விட்டது. நீதிமன்றத்தின் உத்திரவை மயிரளவுக்கு கூட கர்நாடக அரசு மதிக்கவில்லை. எந்த நீதிமன்றத்துக்கும் இது நீதிமன்ற அவமதிப்பாகத் தெரியவுமில்லை.
அதே கர்நாடக மாநிலத்தில்தான் சுரங்க மாபியாக்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவான ஆட்சி நடக்கிறது. கைதான ரெட்டிகளுக்கு ஜெயிலில் மாப்பிள்ளை விருந்து நடக்கிறது. கிங் ஃபிஷர் மல்லையாவின் ஊதாரித்தனத்தை உலகமே அறிந்த பிறகும் அவருக்காக வங்கிகளிடம் வக்கலாத்து வாங்குகிறது அரசு. விமான‌ சேவைத் துறையில் ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளை நுழைய‌ அனும‌தித்து ம‌ல்லையாவை மீட்க‌ முனைகிறார்க‌ள்.
அந்த மாநிலத்தில் தான் அக்கு, லீலா என்ற‌ மூதாட்டிக‌ள் பதினைந்து ரூபாய்க்கு க‌ழிவ‌றைக‌ளை சுத்த‌ம் செய்து கொண்டிருக்கிறார்க‌ள். இந்தியா வல்லரசு என்பதன் பொருள் இதுதானோ?
படிக்க

கருத்துகள் இல்லை: