சனி, 6 அக்டோபர், 2012

மதவெறி ஆட்சிக்கு வரவேற்பா? மத்திய அரசுக்கு வீரமணி எச்சரிக்கை!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோதத் திட்டங்களை  தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது.கேளாக்காதாக மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்நிய மூலதன முதலீடு என்பது பன்னாட்டுத் தொழில் துறை திமிங்கிலங்களின் பச்சாதாபப்படாத சுரண்டல்களுக்குக் கதவு திறந்து விடுவது என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே சுட்டிக் காட்டியும் அதுபற்றி மத்திய அரசு கேளாக் காதுடன் செயல்படுகிறது. ஓய்வுத் துறையிலுமா?இப்போது ‘ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்பது போன்று, அதற்கு மேலும் அடுத்த கட்டமாக, இன்ஷூரன்ஸ் - காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறை - இவை இரண்டிலும் அந்நிய முதலாளிகளை வரவழைக்க ஆயத்தமாவோம் என்று அறிவித்துள்ளது!

இன்ஷூரன்ஸ் துறையில் 26 சதவிகிதமான வெளிநாட்டு முதலீடுகள் பங்கு இனி 49 சதவிகிதமாக உயரும் என முடிவு செய்து பச்சைக் கொடி காட்டுகிறது.
அதைவிடக் கொடுமை - ஓய்வூதியத் துறையிலும் வெளிநாட்டு மூலதனக் கம்பெனிகளுக்குக் கதவு திறக்கப்பட்டுள்ளதாகும்.

உள்நாட்டிலேயே முதலீட்டைத் திரட்ட முடியுமே!

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு முற்றிலும் மாறானது இது. உள்நாட்டிலேயே தேவையான முதலீட்டைத் திரட்டாலாம் என்பதே அதன் யோசனை.
சில புள்ளி விவரங்கள் மத்திய ஆட்சியின் முடிவை நியாயப்படுத்துவதாக இல்லை.>எடுத்துக்காட்டாக,
கடந்த 10 ஆண்டுகளில் 6300 கோடி ரூபாய்கள் வெளிநாட்டு அந்நிய முதலீடாக வந்துள்ளது; ஆனால்  எல்.அய்.சி. மட்டும் ரூ.7000 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.
தனியார்த்துறைக்குத் தாவும் பொதுத்துறைகள்
11ஆவது அய்ந்தாண்டு திட்டத்திற்கு 7 லட்சத்து 415 கோடி ரூபாய் வழங்கியுள்ளது!
பொதுத்துறை நிறுவனத்தை முற்றாக தனியார் மயமாக்குவதற்குரிய முதற்கட்ட முயற்சியே இது!

1.83 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.அய்.சி. 99 விழுக்காடு பாலிசிதாரர்களுக்கு முறையாக பணத்தை வழங்கியுள்ளது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் பாலிசிதாரர்களில் 60 முதல் 80 விழுக்காடு மட்டுமே வழங்கி வருகின்றன.
இது எதைக் காட்டுகிறது? பொதுத்துறை நிறுவனம், தனியார் துறையைவிட சிறப்பாக திறமையாகச் செயல்படுகிறது என்பதைத்தானே!

நமது அரசியல் சட்டத்தில்  உள்ள ‘சோசஷலிசம்’ வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

ஓய்வூதியக்காரர்களின் எதிர்காலம்?

ஓய்வூதியத்திலும் இந்த ‘ஒட்டகத்தை’ நுழைய விடுவது மிகப் பெரிய மக்கள் விரோதம். ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் இருண்டுவிடக் கூடிய ஆபத்து அறவே இல்லை என்று மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தற்போதுள்ள அமைப்பில் - ஓய்வூதியத் திட்டம் 1995இல் ஒரு ஊழியர் இறந்தால் - அது ஆயுள் முழுமைக்கானது என்ற காரணத்தால், அவரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் அல்லது 100 மாதங்களுக்கான மொத்த ஓய்வூதியம் கொடுக்கப்படும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.

இதே போன்று தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? இடையில் மூடப்பட்டால் (‘என்ரான்’ போன்ற நிறுவனங்கள் முன்மாதிரி) இன்சால்வென்ட் ஆனால் யாரைப் போய் கேட்க முடியும்? அரசு உரிமையாளர் என்றால் நிலை அப்படி அல்லவே!

செயல்படாத கணக்குகளால் லாபம்

இன்னொரு திடுக்கிடும் புள்ளி விவரம் இந்த முடிவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது!
தற்போது இந்திய தொழிலாளர் வைப்பு நிதி செயல்படாத கணக்குகள் உள்ள தொகை ரூ.22,636 கோடி. (சந்தா செலுத்தாமை, மூடப்பட்ட நிறுவனங்கள் போன்றவைகளால்)

அதுபோல கேட்பாரில்லாத நிதி  ரூ.4000 கோடி (நாலாயிரம் கோடி).

இந்நிலையில் எதற்கு அந்நிய முதலீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும்?

அந்நிய துணி பகிஷ்காரம் செய்தது மறந்து போயிற்றா?
பிரிட்டிஷ்காரனின் சுரண்டல் ஒழிக என்று கூறியவர்கள் ஆளும் காங்கிரசார்!
அந்நிய துணிகள் பகிஷ்காரம் என்றுகூறி பதவிக்கு வந்தவர்கள்!

Be Indian, Buy Indian”,
“இந்தியனாக இரு; இந்திய சாமான்களையே வாங்கு’’ என்றெல்லாம் நெருக்கடி காலத்தில் தத்துவ முழக்கம் இட்டவர்கள் இப்படி தாறுமாறாக பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலுக்கு பகிரங்க அனுமதியும் அழைப்பும் தரலாமா?

மதவெறி ஆட்சிக்கு வரவேற்பா?

இவை எல்லாவற்றைவிட, இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஆளும் கூட்டணி - (இடையில் கவிழ வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொண்டே) வாக்கு வங்கி பற்றியும், ஏழை, எளிய, பாமர, விவசாய, வியாபாரிகள் கண்ணோட்டம் ஆதரவு பற்றியும் சிந்திக்க வேண்டாமா?

மதவெறி ஆட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இப்படிப்பட்ட முடிவுகள் மூலம், தங்களை அறியாமலேயே வழிவகுக்கலாமா?
மான்டேக்சிங் அலுவாலியாக்களும், ரங்கராஜ அய்யங்கார்களும், கெல்கர்களும் இதர ஜோல்னாப்பை  அறிவு ‘‘ஜீவிகளுமா’’ வந்து வாக்கு கேட்கப் போகிறார்கள்? சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும்தான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அரசியல் சாதுர்யம் கூட இல்லையே!
வேதனை! வேதனை!!

கருத்துகள் இல்லை: