புதன், 3 அக்டோபர், 2012

ரெட் காமிரா கமல்ஹாசன் கலந்தாய்வு பயிலரங்கம்

சினிமா தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம்: கமல் தகவல் சினிமா தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த தகவலை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் அதன் ஊடக துறை தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னையில் (02.10.2012) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


`பிக்கி, 1927-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது, இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான உச்சநிலை தொழிற்கூடம் ஆகும். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், மகாத்மா காந்தியினால் சேவை மனப்பான்மையுடன், இந்திய தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டது.இது, ஒரு தொழில் என்ற அந்தஸ்தை சினிமா துறைக்கு வாங்கிக்கொடுத்தது, இந்த அமைப்புதான். சினிமா துறையினரின் குறைகளையும், தேவைகளையும் கேட்டு, அரசுக்கு எடுத்து சொன்னது.இதற்கான கலந்தாய்வு கூட்டம் முதலில் மும்பையில் மட்டும் நடைபெற்றது. பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்றது. கடந்த ஆண்டு முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்திய சினிமாவின் 100 ஆண்டு கொண்டாட்டமாக, சினிமா தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிலரங்கம் வருகிற 16, 17-ந் தேதிகளில், சென்னையில் நடைபெற இருக்கிறது.அதில் மம்முட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம், பிரியதர்ஷன், சிங்கீதம் சீனிவாசராவ், அனுராக் கஷ்யப், ரோகன் சிப்பி, சோரப் சுக்கலா ஆகியோருடன் ஆஸ்கார் விருது வென்ற `லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்' தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னும் கலந்து கொள்கிறார். புகழ்பெற்ற ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.இந்த நாட்டின் ஊடகம் மற்றும் கேளிக்கை துறையின் பெருமை மிகுந்த தளமாக `பிக்கி' வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அறிவும், அனுபவமும், செயலாக்க பகிர்தலும் கொண்ட இப்படிப்பட்ட நிகழ்வுகளை, ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் கேளிக்கை துறையுடன் சம்பந்தப்பட்ட கலைஞர்களையும், வல்லுனர்களையும் கொண்டு நடத்துவதில், `பிக்கி' மகிழ்ச்சி அடைகிறது.இந்த கலந்தாய்வு மற்றும் பயிலரங்க கூட்டத்தில், `ரெட் காமிரா' பயன்படுத்துவது பற்றியும், டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றியும் விளக்கம் அளிக்கப்படும்.'' இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

கருத்துகள் இல்லை: