ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

EVKS.Ilangovan:கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்:

முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்,  ’’பிரதமர் அறிவுரைப்படி கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த தவறினால் கர்நாடக அரசை மத்திய அரசு கலைத்து விட்டு அங்கு கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் முன்பு 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 14 மணிநேரமாக உயர்ந் திருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. மின் வெட்டை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் போராட்டக்காரர்கள் மீது மாநில அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அங்கு மின்உற்பத்தி தொடங்க மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


தற்போதைய நிலையில் தனியாருக்கு கொடுக்க வேண்டிய மின்சக்தி பாக்கியை கொடுத்தாலே மின்வெட்டினை தவிர்க்க முடியும். காங்கிரசின் புதிய பொருளாதார கொள்கையின் பயன்களை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்திய நாணையத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதித் தால் விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

பொருட்களின் தரம் உயரும். அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடவில்லை. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்தான் சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். அன்னிய முதலீட்டினை அனுமதித்தால் பட்டதாரி அல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

எவ்வளவு பெரிய பிரச்சினைக்கும் காங்கிரசால் தீர்வு காண முடியும். எப்போது தேர்தல் வந்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறும். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் சிலிண்டர் போதும். இருப்பினும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 3 சிலிண்டர் கூடுதலாக மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்’’ என்று கூறினார்

கருத்துகள் இல்லை: