செவ்வாய், 17 ஏப்ரல், 2012

கனிமொழி :பால் விலையை கூட்டி புட்டி விலையை குறைத்த ஜெயலலிதா

சென்னை: பால் விலையை உயர்த்திவிட்டு, பால் புட்டியின் விலையை குறைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.




மின் கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து, திருவொற்றிïரில் நடந்த கூட்டத்தில், கனிமொழி பேசுகையில்,
மின் கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், இவர்களின் கூட்டணி கட்சி நடத்தும் ஜனசக்தி பத்திரிகையிலேயே மின் கட்டண உயர்வு 60 முதல் 70 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு சாதாரண பொதுமக்களை மட்டும் பாதிக்கவில்லை. பல்வேறு சிறு தொழில் முனைவோரையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த கட்டண உயர்வால், பல்வேறு தொழில் நிறுவனங்களை மூடும் நிலைக்குச் சென்றுள்ளன.

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

பால் விலையை உயர்த்திவிட்டு, பால் புட்டியின் விலையை குறைக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, சி.எப்.எல். பல்புகளின் விலையை குறைக்கிறார். வாட் வரி உயர்த்தப்பட்டதால் ஒரு மூட்டை அரிசிக்கு ரூ.50 விலை உயர்ந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா கோதுமை, ஓட்ஸ் விலையை குறைத்துள்ளார். தமிழகத்தின் அரிசிதானே முக்கிய உணவு. ஆனால் கோதுமையின் விலையை குறைத்தது ஏன்? என்று புரியவில்லை.

சமீபத்திய தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.2,376 கோடி உபரியாக உள்ளது என்று அறிவித்திருக்கிறார். மக்கள் கடுமையான சிரமத்தில் இருக்கும்போது, கஜானாவை நிரப்புவதில் குறியாக இருக்கிறார். ஒரு குடும்பத்தில் குழந்தைகளை பட்டினி போட்டுவிட்டு, வங்கியில் ரூ.1,000 சேமிப்பு செய்யும் குடும்ப தலைவரை என்னவென்று சொல்வீர்கள்? மக்களை பட்டினி போட்டுவிட்டு, அரசு கஜானாவை நிரப்பும் ஒரு அரசு அரசா?

ஜெயலலிதா இன்று கே.பி.பி.சாமியை சிறையில் அடைக்கலாம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை சிறையில் அடைக்கலாம், திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்கலாம். ஆனால், `அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று கூறும் கருணாநிதியின் தொண்டர்கள் நாங்கள். இதுபோன்ற வழக்குகளையெல்லாம் கண்டு அஞ்சமாட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை: